மதுரை புத்தகத் திருவிழாவுக்கு 4 லட்சம் பேர் வருகை: ரூ.3.50 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை புத்தகக் கண்காட்சி நிறைவுபெற்ற நிலையில் 4 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் ரூ.3.50 கோடிக்கு புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர்.

மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்பில் நடந்த மதுரை புத்தகத் திருவிழாவை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கடந்த செப்டம்பர் 6ம் நாள் தொடங்கி வைத்தார். தமுக்கம் மாநாட்டு மையத்தில் குளிரூட்டப்பட்ட வசதியுடன் 230-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. தினந்தோறும் மாலை 6 மணியளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் தலை சிறந்த எழுத்தாளர், முன்னணி பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்ற சிந்தனை அரங்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. புத்தகத் திருவிழாவை பார்வையிட வருகை தரும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இந்த ‘புத்தகத் திருவிழா 2024’ கடந்த 17ம் தேதி நிறைவுபெற்றது. 700-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சார்ந்த 42,000 மாணவ மாணவியர்கள் உட்பட 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர். மாணவ, மாணவியர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ.3.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE