தண்ணீரின்றி பயிர் கருகுது... வழக்கை உடனே விசாரியுங்கள்! தமிழக அரசின் முறையீட்டால் திங்கள்கிழமை விசாரணை

By காமதேனு

தமிழகத்திற்கு காவிரியில் மாதாந்திர முறைப்படி தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு தராமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் மேட்டூரில் நீர்மட்டம் 50 அடியாக குறைந்து பாசனத்திற்காக வெறும் 6000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. அந்த தண்ணீரை நம்பி காவிரி டெல்டாவில் பயிரிடப்பட்டிருந்த குருவைப் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிப் போய் விட்டன.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் கூட கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாத நிலையில் காவிரி நீர் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு முறையீடு செய்தது.

உச்சநீதிமன்றம்

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்யாததாலும், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததாலும் 5 லட்சம் ஏக்கரில் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை வரை தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டிய 28.8 டிஎம்சி நீரை திறந்து விட கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதத்துக்குன்டான 45 டிஎம்சி நீரை இம்மாத இறுதிக்குள் திறந்து விட வேண்டும் என்றும், செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய 36.76 டிஎம்சி நீரை உரிய நேரத்தில் திறந்து விடவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தண்ணீர் இன்றி பயிர் கருகுவதால் கர்நாடக அரசு காவிரியில் இருந்து வினாடிக்கு 24,000 கனஅடி நீர் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு இடையீட்டு மனுத் தாக்கல் செய்தது.

இடையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. பட்டியலில் இணைக்கப்படாமல் முறையீட்டை எவ்வாறு ஏற்பது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து முறையீட்டு பட்டியலில் இணைக்க உச்சநீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை வைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி கோரிக்கை வைக்கப்பட்டு, மனு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE