வேதனை... விலை வீழ்ச்சி, விற்பனை குறைவு... குப்பையில் வீசப்படும் கொத்தமல்லி இலைகள்

By காமதேனு

தாங்கள் பயிரிட்டிருந்த கொத்தமல்லி இலைகளை அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாலும், விற்பனை குறைவாலும் வேதனை அடைந்துள்ள விவசாயிகள் அவற்றை குப்பையில் வீசி எறிந்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், மத்திகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகள் மற்றும் கீரை, புதினா, கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த மாதம் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டதால், பலர் குறைந்த நாட்களில் பலன் தரும் கொத்தமல்லி, கீரை சாகுபடியில் ஈடுபட்டனர். மேலும், கடந்த வாரம் பெய்த மழையால் கொத்தமல்லி விளைச்சல் வழக்கத்தை விட அதிகரித்தது. இதனால், சந்தைக்கு வரத்து அதிகரித்து, விலை சரிந்துள்ளது.

குப்பையில் எறியப்பட்டுள்ள கொத்தமல்லி இலைகள்

சந்தையில் கொத்தமல்லிக்கு ஆண்டு முழுவதும் வரவேற்பு உண்டு. கொத்தமல்லி இலையைப் பொறுத்தவரை சந்தைக்கு வரத்து மற்றும் நுகர்வுத் தேவையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும். குறைந்தபட்சம் பத்து ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒரு கட்டு ரூ.25 வரை விற்பனை செய்யப்படும்.

கடந்த ஒரு வாரமாக சந்தைக்கு வரத்து அதிகரித்ததால், படிப்படியாக விலை குறைந்து நேற்று ஒரு கட்டு ரூ.2 முதல் ரூ.5 வரை விற்பனையானது. வழக்கத்தை விட விற்பனையும் சரிந்தது. இதனால், போக்குவரத்து செலவு, அறுவடை கூலிக்கு கூட விலை கிடைக்காததால், பல விவசாயிகள் கொத்தமல்லி அறுவடையைத் தவிர்த்து வருகின்றனர். மேலும், விற்பனையாகாத கொத்தமல்லி கட்டுகளை குப்பையில் வீசி வருகின்றனர்.

இதனால் விவசாயிகளுக்குப் பயிர் சாகுபடி மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பாக முறையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE