விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு: பயிர்க் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்!

By காமதேனு

தமிழகத்தில் சம்பா பருவத்தில் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்குக் காப்பீடு செய்து கொள்ள இன்றே கடைசி நாள் என்பதால் இதைத் தவறவிடாமல் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வறட்சி மற்றும் மழை வெள்ளம் காரணமாக சமீப காலமாக விவசாயம் பொய்த்து வரும் நிலையில் தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு ஒன்றுதான் உரிய நிவாரணமாக இருந்து வருகிறது. பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் பயிர்களைக் காப்பீடு செய்து கொண்டால் அவர்களுக்கு பாதிப்பின் அடிப்படையில் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதை வைத்துத் தான் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறார்கள்.

சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் இன்று நவம்பர் 15-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் பலன் பெறலாம் எனவும் நிலத்தடி நீரை தேவைக்கேற்றவாறு விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயி

ஒரு ஏக்கருக்கு 512.75 ரூபாயைத் தங்கள் பங்காக செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் சார்பில் மீதத்தொகை செலுத்தப்பட்டுவிடும். பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகள் நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விபரங்களை, சரியாக அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கூட்டுறவு வங்கிகள் மற்றும் இ சேவை மையங்கள் மூலம் பயிர் காப்பீடு எளிதில் செய்து கொள்ள முடியும். டெல்டாவில் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் பலர் இன்னும் தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்யாமல் இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் பயிர் காப்பீடு செய்ய இயலவில்லை.

எனவே, பயிர் காப்பீடு செய்ய இந்த மாதம் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அவகாசம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE