பாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு... விவசாயிகள் போராட்டத்தின் மத்தியில் இமாச்சல் அரசு அதிரடி அறிவிப்பு

By காமதேனு

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு கோரி விவசாயிகள் போராடிக்கொண்டிருப்பதன் மத்தியில், காங்கிரஸ் ஆட்சியிலான இமாச்சல் பிரதேசம் மாநிலம் பாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.

இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இன்றைய தினம்(பிப்.17) தனது ஆட்சியின் இரண்டாவது மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2024-25ம் நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக பசு மற்றும் எருமைப்பாலின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளார். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும் என்பது, டெல்லியை நோக்கி பேரணியாக கிளம்பியிருக்கும் விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இந்த சூழலில் விவசாயிகளின் இன்னொரு வருமான ஆதாரமான பாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி இமாச்சல பிரதேச அரசு அறிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

பால்

​​மாநிலத்தின் நிதி இலாகாவையும் தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, பசும்பாலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை லிட்டருக்கு ரூ38-லிருந்து ரூ45 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.38லிருந்து ரூ.55 ஆகவும் உயர்த்தி அறிவித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி எல்லையில் ஒரு வருடத்துக்கும் மேலாக முகாமிட்டு போராடிய விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது இருந்தது. விவசாயிகளின் தற்போதை போராட்ட களத்திலும் இதுவே முதன்மையான கோரிக்கையாக அமைந்துள்ளது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி வெளிப்படையான ஆதரவு தெரிவித்திருப்பதன் மத்தியில், காங்கிரஸ் ஆளும் மாநிலமான இமாச்சல் பிரதேசம் பாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை தந்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது. இன்று தாக்கலான பட்ஜெட்டில், பாலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மட்டுமன்றி, விவசாயிகள் நலன்நாடும் வேறு பல அறிவிப்புகளையும் முதல்வர் சுகு அறிவித்துள்ளார். விவசாயத் துறைக்கு ரூ.582 கோடியும், தோட்டக்கலைத் துறைக்கு ரூ.300 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளதோடு, கடந்த ஆண்டு பருவமழைக்கான பேரிடர் நிவாரண நிதியாக ரூ.4,500 கோடியை முதல்வர் அறிவித்துள்ளார். இத்தோடு மழை நிவாரணத்துக்கு என மத்திய அரசு எந்த தொகுப்பையும் விடுவிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்ஜெட் அறிக்கையுடன் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு

இமாச்சல் பிரதேசத்தின் தனி அடையாளமான ஆப்பிள் விற்பனையை சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்தும் வகையில், ஆப்பிள் பேக்கேஜிங்கிற்காக உலகளாவிய அட்டைப்பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். 2026-ம் ஆண்டுக்குள் இமாச்சலப் பிரதேசத்தை பசுமையான மாநிலமாக மாற்றுவதற்கான மாநில அரசின் தீர்மானத்தை அவர் மீண்டும் தெளிவுபடுத்தினார். ‘ராஜீவ் காந்தி பிரக்ரியாத் கெதி யோஜ்னா’ என்ற பெயரில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், பஞ்சாயத்து தோறும் 10 விவசாயிகள் என மொத்தம் கீழ் 36,000 விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் நுட்பங்களில் பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

டெல்லியில் அதிர்ச்சி... நேரு ஸ்டேடியம் அருகே இடிந்து விழுந்த கட்டுமானம்; 12 பேரின் கதி என்ன?

விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து... 10 பேர் பலியான பரிதாபம்

டெல்லியில் அதிர்ச்சி... சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து; பதற வைக்கும் வீடியோ!

மகளிர் கிரிக்கெட்; டீம் முன்பு பேருந்தில் மது அருந்திய தலைமை பயிற்சியாளர்!

பகீர்! பட்டப்பகலில் 12ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை.. 17வயது சிறுவன் வெறிச்செயல்... பதறியோடிய மக்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE