ஆவடி பணிமனையில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 17ம் தேதி முதல் பிப்ரவரி 18ம் தேதி வரை ஆவடி வழித்தடத்தில் இயங்கும் 15 புறநகர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்காக அவ்வப்போது ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. சென்னை மாநகரின் முக்கிய போக்குவரத்தில் ஒன்றாக விளங்கிவரும் புறநகர் ரயில் போக்குவரத்து சேவையில் அவ்வப்போது இதற்காக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆவடி பணிமனையில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக 15 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பிப்ரவரி 17ம் தேதி இரவு 10:25 மணி முதல் பிப்ரவரி 18ம் தேதி காலை 4:30 மணிவரை ஆவடி வழித்தடத்தில் இயங்கும் 15 புறநகர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 12 புறநகர் ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாகவும், 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பட்டாபிராம் ரயில் நிலையம், ஆவடி ரயில் நிலையம்,. மூர் மார்க்கெட் ரயில் நிலையம் ஆகிய ரயில் நிலையங்களில் பகுதியாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அண்ணனூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சில ரயில்கள் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இதற்கு ஏற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு; மு.க.அழகிரி உள்ளிட்டோர் விடுதலை!
சிறுநீரில் இருந்து மின்சாரம்... மாத்தியோசித்த பாலக்காடு ஐஐடி மாணவர்கள்!
முன்னாள் பிரதமருக்கு திடீர் உடல் நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி!
கெட்டதிலும் ஒரு நல்லது... மகன் இறப்புக் குறித்து சூர்யாவிடம் உருகிய சைதை துரைசாமி!
விவசாயிகள் போராட்டத்தில் அதிர்ச்சி... மாரடைப்பால் ஒருவர் உயிரிழப்பு!