விவசாயத்தின் மீதான ஈர்ப்பால் மைக்ரோசாப்ட் வேலையை விட்டவர்... மாதம் ரூ.1.5 லட்சம் சுயமாக சம்பாதிக்கிறார்!

By காமதேனு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர் தனது சொந்த ஊர் மற்றும் விவசாயத்தின் மீது உள்ள ஆர்வத்தால் வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்து விவசாயம் செய்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்.

உத்தர பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள சில்பிலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அபினவ் சிங். விவசாய குடும்ப பின்னணியில் வளர்ந்த அபினவ் சிங், படிப்பை முடித்தவுடன் பிரிட்டன் நாட்டில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ரூ.80 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். பணம் அவருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. குடும்பம் மற்றும் நண்பர்களால் சூழப்பட்ட நிறைவான வாழ்க்கையை விரும்பினார்.

அது அங்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் 2014-ல் பிரிட்டன் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினார். இந்தியாவில் குர்கானில் உள்ள மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் சேர்ந்தார். ஆனாலும் இதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சொந்த ஊரில் விவசாயம் செய்வதோடு, அங்குள்ள மக்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது.

அபினவ் சிங்

ஒரு கட்டத்தில் விவசாயம் தான் தமக்கானது என்று முடிவு செய்த அபினவ் சிங், 2016-ல் மைக்ரோசாப்ட் வேலையை ராஜினாமா செய்தார். தனது 31 வயதில் கெர்பரா (Gerbera) விவசாயத்தில் அனுபவம் பெற முடிவு செய்தார். கெர்பரா என்பது பூக்கள் கொண்ட தாவரம், உத்தர பிரதேசத்தில் திருமண காலங்களில் இந்த பூக்களுக்கு பெரிய தேவை இருக்கும். கெர்பரா சாகுபடி குறித்து தெரிந்து கொண்ட பின், அபினவ் சிங் தனது கிராமத்தில் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு பாலிஹவுஸ் அமைத்தார்.

வங்கி கடன் ரூ.48 லட்சம் மற்றும் தனது சேமிப்பு தொகைகளையும் சேர்த்து மொத்தம் ரூ.58.16 லட்சத்தை முதலீடாக போட்டு இந்த பாலிஹவுஸை அமைத்தார். 2012 பிப்ரவரியில் முதல் முறையாக அறுவடை செய்தார். பூ சாகுபடி விவசாயத்தை தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் அபினவ் சிங்குக்கு ரூ.18,00,000 வருமானம் கிடைத்தது. மேலும், விவசாயம், பேக்கேஜிங், போக்குவரத்து மற்றும் விற்பனை போன்ற பல்வேறு பிரிவுகளில் சுமார் 100 பேருக்கு வேலைவாய்ப்பும் வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது.

அபினவ் தோட்டம்

இதுகுறித்து அபினவ் சிங் கூறுகையில், "நான் முன்பு பார்த்த வேலையில் எவ்வளவு சம்பாதித்தேனோ அதனை காட்டிலும் குறைவாகவே தற்போது சம்பாதிக்கிறேன். ஆனால் மற்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குவது, எனது சொந்த ஊரில் தனித்துவமான ஒன்றை செய்வது மற்றும் எனது குடும்பத்துடன் தங்குவது போன்ற மகிழ்ச்சியை எவ்வளவு பணம் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையாலும் கொடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE