தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்தால் ஒரு கிலோ பூண்டு இலவசம் என போலீஸாரும், தனியார் அமைப்பும் அறிவித்ததால் ஏராளமான பெண்கள் குவிந்தனர்.
அன்றாட சமையலில் முக்கிய அங்கமாக இருந்து வரும் பூண்டு, கடந்த சில நாட்களாக விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ பூண்டு சில இடங்களில் ரூ.500 வரையும் விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். பூண்டு விலை உயர்வு காரணமாக, ஓட்டல்களிலும் அதன் பயன்பாடு குறைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் போக்குவரத்து போலீஸார், 100 சதவீதம் ஹெல்மெட் கட்டாயம் என்பதை வலியுறுத்தி தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஹெல்மெட் அணிந்து பயணிப்போருக்கு ஆச்சரிய பரிசுகளை வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலா ஒரு கிலோ பூண்டு பரிசாக வழங்க போலீஸார் முடிவு செய்தனர்.
இதன்படி தஞ்சாவூர் நகரில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த 50 பயணிகளுக்கு போலீஸாரும், தனியார் நிறுவனத்தினரும் தலா ஒரு கிலோ பூண்டை பரிசாக வழங்கினர். அப்போது, ”பூண்டு இதயத்தை காக்கும். ஹெல்மெட் தலைமுறையைக் காக்கும்” என்ற வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டிருந்தது வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் ரவிச்சந்திரன், தொண்டு நிறுவன செயலாளர் பிரபு ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.