விவசாயிகளுக்கு ஆறுதல்... வறட்சி நிவாரணமாக ரூ.345 கோடியை விடுவித்தது அரசு!

By காமதேனு

வறட்சி பாதித்த 216 தாலுகாக்களில் குடிநீர், கால்நடைகளுக்கு தீவனம் உள்ளிட்ட வசதிகளை உடனடியாக செய்வதற்கான, வறட்சி நிவாரண நிதியாக, கர்நாடக அரசு 324 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.

கர்நாடகாவில் இந்தாண்டு பருவமழை 64 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால், மாநிலத்தின் 216 தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக மாநில அரசு அறிவித்தது. இந்த பகுதிகளில், மத்திய குழுவினர் ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்கு, மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்கவில்லை. இதுகுறித்து, எதிர்க்கட்சியினர் காங்கிரஸ் அரசை கடுமையான கண்டித்தனர்.

கர்நாடகாவில் வறட்சி

இந்நிலையில், வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர்களின் வங்கி கணக்கிற்கு வருவாய் துறை சார்பில், 324 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதி விதிகளின்படி, இந்த நிதியைப் பயன்படுத்தும்படி கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 216 தாலுகாக்களில் குடிநீர், கால்நடைகளுக்கு தீவனம் உள்ளிட்ட வசதிகளை உடனடியாக செய்யும்படி அரசு உத்தரவிட்டு உள்ளது.

கர்நாடகாவில் 216 தாலுகாக்களில் வறட்சி பாதித்துள்ளதாலும், அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும், தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கமுடியாது என அம்மாநில அரசு திட்டவட்டமாக கூறிவருகிறது. இதனால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஏக்கர்களில் குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE