நோயாளி பியானோ வாசிக்கையில், மூளையை திறந்து அறுவை சிகிச்சை; எய்ம்ஸ் மருத்துவர்கள் அசத்தல்!

By காமதேனு

போபாலை சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், விழித்திருக்கும் நபருக்கான மிகவும் சிக்கலான மூளை அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அப்போது அந்த நோயாளி பியானோ வாசித்தபடியும், சுலோகங்கள் சொன்னபடியும் இருந்தார்.

பீகாரின் பக்ஸர் பகுதியை சேர்ந்த 28 வயது இளைஞருக்கு வலிப்பு பிரச்சினை அதிகரித்து வந்தது. அவரது உடலை முழுமையாக ஆராய்ந்த மருத்துவர்கள் மூளையில் இருக்கும் கட்டி ஒன்று, உடலின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் மோட்டார் கார்டெக்ஸ் பகுதியில் வளர்வதை கண்டறிந்தனர். எனவே உடனடியாக அந்த கட்டியை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அறுவை சிகிச்சையின் போது பியானோ வாசிக்கும் நோயாளி

வழக்கமான அறுவை சிகிச்சையின்போது குறிப்பிட்ட அவயத்துக்கோ அல்லது ஒட்டுமொத்த உடலுக்கோ மயக்க மருந்து அளிப்பது வழக்கம். ஆனால் இந்த நோயாளிக்கு உடலியக்க மோட்டார் செயல்பாடுகளை கண்காணித்தப்படியே அறுவை சிகிச்சை மேற்கொள்வது அவசியம். எனவே அவருக்கு மயக்க மருந்து தரப்படாது அறுவை சிகிச்சை நடத்த முடிவானது.

அதன்படி அறுவை சிகிச்சை அரங்கில் படுத்திருக்கும் நோயாளியின் கபாலத்தை திறந்து, மருத்துவர்கள் தங்கள் அறுவை சிகிச்சை நடைமுறைகளை தொடங்கினர். அப்போது விழித்திருக்கும் நோயாளியின் உடலியக்கத்தை கண்காணிக்க அவரிடம் பேச்சு கொடுத்தனர்.

பியானா வாசிப்பது, அனுமன் சாலிஸா படிப்பது என தானறிந்த செயல்பாடுகளை நோயாளியும் ஆர்வமுடன் மேற்கொண்டார். இவற்றினூடே, போபால் எய்ம்ஸ் மருத்துவர்கள் நோயாளியின் மூளையில் புதைந்திருந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.அறுவை சிகிச்சையை அடுத்து அந்த இளைஞர் இயல்பான உடல்நலத்துக்கு வேகமாக தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை தமிழகத்திற்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

திமுக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான 40 இடங்களில் ரெய்டு!

சிறையில் இனி கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்!

இன்று 11 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!

குட்நியூஸ்: இன்று முதல் 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE