விவசாயிகளின் ரூ.23 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்வோம் - ராகுல் காந்தி வாக்குறுதி!

By காமதேனு

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் எல்கேஜி முதல் உயர்கல்வி (பட்டமேற்படிப்பு) வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவோம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, கான்கெர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம். எவ்வளவு வேகமாக அதனை நடத்தி முடிக்க முடியுமோ அந்த அளவுக்கு வேகமாக நடத்தி முடிப்போம் தற்போது மத்தியில் உள்ள பாஜக அரசு எதை செய்ய மறுக்கிறதோ நாங்கள் அதனை செய்வோம். சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பைத் தொடங்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 26 லட்சம் விவசாயிகளின் ரூ.23 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்வோம்.

ராகுல் காந்தி

பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவோம். எல்கேஜி முதல் உயர்கல்வி வரை (பட்டமேற்படிப்பு) இலவசக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவோம். அனைத்து அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவோம். படிப்புக்காக மாணவர்கள் ஒரு பைசா செலவு செய்ய வேண்டாம்" இவ்வாறு அவர் பேசினார்.

ராய்ப்பூர் அருகே நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, தனது வாகனத்தில் இருந்து இறங்கி சாலையோரம் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயத் தொழிலாளர்களை சந்தித்துப் பேசினார். அவர்களுடன் சேர்ந்து நெற்கதிர்களை அறுவடை செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE