திருமணப் பதிவுக்காக வந்த மாற்றுத்திறனாளி மணமகள்... இரண்டாம் மாடிக்கு இழுத்தடித்த அரசு அதிகாரி மீது பாய்ந்தது நடவடிக்கை!

By காமதேனு

பதிவு திருமணத்துக்காக பதிவாளர் அலுவலகத்துக்கு வந்த மாற்றுத்திறனாளி மணமகளை, இரண்டாம் மாடிக்கு இழுத்தடித்த அரசு அதிகாரியை மகாராஷ்டிரா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

விராலி மோடி என்னும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அன்று மணநாள். தனது நீண்ட நாள் காதலரை கணவராக மணமுடிக்கும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தார். மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் விராலி மோடிக்கு, அன்றைய தினம் தன்னுடைய உரிமைக்காக குரல் எழுப்ப வேண்டிய அளவுக்கு கசப்பான அனுபவம் காத்திருந்தது.

மும்பையின் கர் பகுதியில் அமைந்திருந்த திருமண பதிவாளர் அலுவலகம் ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்திருந்தது. இரண்டாம் மாடிக்குச் செல்ல லிப்ட் வசதியும் அந்த கட்டிடத்தில் கிடையாது. இதனால், மணமக்கள் உடன் சென்றவர்கள், பதிவாளர் அலுவலத்துக்கு சென்று மாற்று வழி குறித்து தன்மையாக விசாரித்தனர்.

திருமண அலுவலராக அமர்ந்திருந்த அருண் கோடேகர் என்பவர், நெஞ்சில் சற்றும் இரக்கம் இன்றி சக்கர நாற்காலி மணமகளை எப்படியாவது இரண்டாம் மாடிக்கு வந்தே தீர வேண்டும் என வலியுறுத்தினர். இதற்காக, அரசு அதிகாரியான தன்னால் தரை தளத்துக்கு வர முடியாது என மறுத்தார்.

சக்கர நாற்காலியில் விராலி மோடி

உற்சாகமாக செல்ல வேண்டிய மணநாள், மணமகள் விராலிக்கு சோதனையாக மாறியது. பெரும் அச்சத்துடன் அவர் இரண்டாம் மாடிக்கு தட்டுத்தடுமாறி தூக்கிச் செல்லப்பட்டார். மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் விராலி மோடி, தான் மாற்றுத்திறனாளியாக பிறந்ததற்காக அன்றைய தினம் வெகுவாய் வேதனையடைந்தார். பிற்பாடு இந்த கசப்பு அனுபவத்தை அவர் ட்விட்டரில் கனத்த இதயத்தோடு பதிவிட்டார்.

“நான் சக்கர நாற்காலியில் இருப்பவள் என்பதால், நான் விரும்பும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள எனக்கு உரிமை இல்லையா? அன்றைய தினம் நான் வழுக்கி விழுந்தால் என்ன செய்வது? அதற்கு யார் பொறுப்பாவார்கள்? எனது இயலாமைக்கு நாட்டின் அரசாங்கத்தாலும் குடிமக்களாலும் இடமளிக்க முடியாததால் நான் மனமுடைந்து போயுள்ளேன். மனிதநேயத்தின் மீதான எனது நம்பிக்கை இந்த சோதனையால் இற்றுப்போயுள்ளது. இரண்டாவது மாடிக்கு தூக்கிச்செல்ல நான் ஒன்றும் அஃறிணைப் பொருள் அல்ல; உணர்வும், உரிமையும் உள்ள மனுஷி” என்ற அவரது பதிவு விரைவில் வைரலானது.

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பார்வைக்கும் அந்த பதிவு சென்றது. அடுத்த நாளே திருமணப் பதிவாளர் அலுவலக அதிகாரி அருண் கோடேகரை பணியிடைநீக்கம் செய்து மகாராஷ்டிர வருவாய்த் துறை உத்தரவிட்டது. மேலும், ‘’சிறப்பு திருமணச் சட்டம் 1954’ என்பதன் கீழ் திருமண அலுவலர், திருமணப் பதிவு அலுவலகத்திலிருந்து நியாயமான தூரத்தில் அமைந்துள்ள திருமண நிகழ்விடத்துக்கு சென்றாக வேண்டும்’ என்ற விதியையும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!

நடிகை அமலாபால் 2வது திருமணம்... லிப் கிஸ் கொடுத்து காதலனை அறிமுகப்படுத்தினார்!

பகீர்... திமுக பிரமுகர் மகன் படுகொலை; சென்னையில் பரபரப்பு!

பிரபல நடிகையின் மகன் மர்ம மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE