கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி

By ச.கார்த்திகேயன்

சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) வீழ்ச்சி அடைந்திருந்தது. முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ ரூ.10-க்கு விற்பனையானது.

கடந்த மே, ஜூன் மாதங்களில் கடும் வெயில் மற்றும் அதிகனமழை காரணமாக காய்கறி பயிர்கள் அழிந்தன. இதனால் தமிழகம் மற்றும், தமிழக எல்லையோரத்தில் உள்ள ஆந்திர, கர்நாடக பகுதிகளிலும் காய்கறி உற்பத்தி குறைந்து, கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. தக்காளி மொத்த விலையில் கிலோ ரூ.70, பீன்ஸ் ரூ.110, கேரட் ரூ.80, முருங்கைக்காய் ரூ.90 என உயர்ந்திருந்தது.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவழை பரவலாக பெய்து வரும் நிலையில் தற்போது காய்கறி உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் விலையும் குறைந்து வருகின்றன. பல காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக வெண்டைக்காய், முள்ளங்கி, முருங்கைக்காய், பீட்ரூட், கத்தரிக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், நூக்கல் ஆகிய காய்கறிகளின் விலை ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) தலா ரூ.10 ஆக குறைந்துள்ளது. இதேபோல் கேரட் ரூ.60 ஆகவும், பீன்ஸ் ரூ.20 ஆகவும் குறைந்துள்ளது.

மற்ற காய்கறிகளான பச்சை மிளகாய் கிலோ ரூ. 35, உருளைக்கிழங்கு, சாம்பார் வெங்காயம் தலா ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.28, தாக்களி ரூ.23, அவரைக்காய், பாகற்காய் தலா ரூ.20 என விற்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும்போது, "தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் விலை குறைந்து வருகிறது. செப்டம்பர் வரை விலை குறைந்தே இருக்க வாய்ப்புள்ளது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE