சுவாரசியம்... 90 ஆண்டுகள் தாமதமாக நூலகத்துக்கு திரும்பிய இரவல் புத்தகம்... அபராதம் இவ்வளவா?

By காமதேனு

நியூயார்க் பொது நூலகம் ஒன்றில் இரவல் பெறப்பட்ட புத்தகம் 90 ஆண்டுகள் கழித்து தாமதமாக நூலகத்துக்கு திரும்பியது. அதற்கு தாமத கட்டணமாக நூலகம் விதித்த அபராதம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

நூலகமோ, தனிநபரோ இரவலாக பெறப்பட்ட புத்தகம் தனது இருப்பிடத்துக்கு திரும்புவதில் காலதாமதம் ஆவது சாதாரணமானது. ஆனால் 90 ஆண்டுகள் கழித்து ஒரு புத்தகம் அதன் நூலகத்துக்கு திரும்பி இருப்பது அசாதாரணமானது இல்லையா? அப்படி நியூயார்க்கில் நிகழ்ந்திருக்கும் இந்த சம்பவத்தில் சுவாரசியமும் சேர்ந்திருக்கிறது.

பொது நூலகம்

நியூயார்க்கின் லார்ச்மாண்ட் பொது நூலகத்தில் இருந்து இரவல் பெறப்பட்ட, ஜோசப் கான்ராட் கதைகளின் தொகுப்பு என்ற நூல் 90 ஆண்டுகள் கழித்து அதன் அலமாரிக்கு திரும்பியிருக்கிறது.

1933, அக்டோபர் 11 அன்று இரவல் பெறப்பட்ட அந்த புத்தகம், அதற்கான காலக்கெடு முடிந்த 30 நாட்களுக்குள் நியூயார்க் நூலகத்துக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அந்த நூலை இரவல் பெற்றுச் சென்ற ஜிம்மி எல்லிஸ் எப்படியோ அதனை மறந்து விட்டார். அவர் இறக்கும் 1978 வரை அந்த புத்தகம் நூலகத்துக்கு திரும்பவில்லை. ஜிம்மி எல்லிஸ் இறந்ததும் அவரது உடமைகளில் ஒன்றாக மேற்படி புத்தகத்தையும் கட்டி பரணில் வீசிவிட்டார்கள்.

ஜிம்மி எல்லிஸின் பேத்தியான ஜோனி மோர்கன் அண்மையில் வீட்டை ஒழுங்கு செய்யும்போது அந்த அழகான புத்தகத்தை கண்டெடுத்தார். சுமார் 90 ஆண்டுகளாக தனது நூலகத்தை விட்டுப் பிரிந்திருக்கும் அந்த புத்தகத்தை திருப்பி சேர்ப்பது என முடிவு செய்தார். அதன்படி நியூயார்க் நூலகத்தை தொடர்பு கொண்டு பேசியபின், புத்தகத்தை அனுப்பி வைத்தார்.

நூலக புத்தகம்

புத்தகம் திரும்பப் பெறப்பட்டதும் முதல் வேலையாக, இரவல் நூலுக்கான தாமதக் கட்டணத்தை நூலக அலுவலர்கள் கணக்கிட்டனர். தினத்துக்கு 20 சென்ட் என்றளவில் சுமார் 90 ஆண்டுகளுக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 6,400 அபராதமாக வந்தது. இது தொடர்பான தகவலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த நூலக நிர்வாகம், 6400 டாலருக்கு பதில் 5 டாலர் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தது.

நூலக விதிமுறைகளின்படி புத்தகம் இரவல் பெறப்பட்ட 30 நாட்களைக் கடந்ததும், அது தொலைந்து போனதாக கணக்கில் ஏறும். அந்த வகையில் திரும்பக்கிடைத்த புத்தகத்தின் ஆரம்ப விலையான 5 டாலர் மட்டுமே அதனை இரவல் பெற்றவரின் உறவினரிடம் கோரப்பட்டது.

பொது நூலகம், அங்கே மலை போல குவிந்து கிடக்கும் புத்தகங்கள், அவற்றை இரவல் பெற்றுச் செல்லும் வாசகர்கள், இரவல் நூல் தாமதமானால் அதற்கு விதிக்கப்படும் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள், இன்றைய நூல் வாசிப்பு பழக்கம் அருகிப்போன ஆன்லைன் தலைமுறையினருக்கு ஆச்சரியமளிக்கக் கூடியது. எனவே, இணையத்தில் இந்த இரவல் நூலும், அது நூலகத்துக்கு திரும்பிய கதையும் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இளம்பெண் தற்கொலை... ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம்!

குட்நியூஸ்... தமிழக அரசில் 368 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கவும்!

‘பாஸ்போர்ட் ஊழல்’ ஒரே நேரத்தில் 50 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு!

பிரபல நகைச்சுவை நடிகர் அதிரடி கைது! திரையுலகில் பரபரப்பு!

பகீர்... காதலி வீட்டார் மயக்க மருந்து கொடுத்து சுன்னத் செய்து விட்டனர்... கதறும் காதலன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE