விளை நிலங்களை அழித்து கிரானைட் குவாரி: தமிழக அரசின் அறிவிப்பால் கொந்தளிக்கும் விவசாயிகள்

By காமதேனு

மதுரை மாவட்டத்தில் மீண்டும் கிரானைட் குவாரிகளுக்கு டெண்டர் விட தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளதால் மதுரை மாவட்ட மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

மதுரை மாவட்டத்தில் ஏற்கெனவே நடத்தப்பட்டு வந்த கிரானைட் குவாரிகளால் மேலூர்- கொட்டாம்பட்டி பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. விவசாயம் பாதிக்கப்பட்டதோடு சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தப் பகுதிகளில் மீண்டும் கிரானைட் குவாரிகளுக்கு டெண்டர் விடப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள அய்யயாபட்டி மற்றும் சேக்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மூன்று கிரானைட் குவாரிகள் நடத்த டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட 3 இடங்களிலும் உள்ள இந்த குவாரிகளை சுற்றி அதிக அளவில் விளை நிலைங்கள் உள்ளன. இங்கு பல தலைமுறைகளாக விவசாயிகள் நெல், கடலை, காய்கறிகள், சிறுதானியங்கள், தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விளைவித்து வருகின்றனர். கால்நடை வளர்ப்பும் அதிகமாக நடந்து வருகிறது.

குவாரி அமைய உள்ள இடத்தில் விவசாயம்

இதுகுறித்து பல விவசாயிகளும் இந்த கிரானைட் குவாரிகள் வருவதால் தங்களின் விவசாயத்திற்கு பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் சுற்றுச்சூழலுக்கும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமையப்போகும் இந்த கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.

இந்த அறிவிப்புகளை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனே திரும்ப பெற வேண்டும் . இல்லையென்றால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்காக பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என்று மதுரை மாவட்ட எரிகாற்று குழாய் பதிப்பு எதிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE