பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் 41% குழந்தைகளுக்கே தாய்ப்பால் கிடைக்கிறது: அரசு மருத்துவர் தகவல்

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை: உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம், உலக தாய்ப்பால் வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு ‘இடைவெளியை குறைப்போம் - அனைவருக்கும் தாய்ப்பாலூட்டல் ஆதரவளிப்போம்’ என்ற கருப்பொருளுடன் வார விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தாய்ப்பால் குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரும், தாய்ப்பாலூட்டல், இணை உணவு ஆலோசகருமான இர.முத்தமிழ் வீணா, ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது, "பச்சிளங் குழந்தைகளுக்கும், இளம் குழந்தைகளுக்கும் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் கொண்ட ஒரே ஒரு உணவு தாய்ப்பால். தாயிடமிருந்து மட்டுமே கிடைக்கும் விலைமதிப்பில்லா வெள்ளைத் தங்கமாகும்.

மருத்துவர் இர.முத்தமிழ் வீணா

குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பிறகு, இணை உணவுகளுடன் 2 ஆண்டுகள் வரை கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் ஆரோக்கியத்தில் மட்டுமில்லாமல், தாயின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், ஆய்வுகளின் மூலம் பெறப்படுகிற தரவுகள் சற்றே ஏமாற்றம் அளிக்கின்றன.

ஏனெனில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின்படி (என்எப் ஹெச்எஸ்-5 2021) 88.6 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நிகழ்ந்தாலும், 41.6 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த முதல் ஒரு மணிநேரத்துக்குள் தாய்ப்பால் புகட்டப்படுகிறது.

மேலும், முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் கொடுப்பது 61.9 சதவீதமாகவே உள்ளது. 2019-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியாவில் தாய்ப்பால் உடனடியாக கொடுக்கப்படாததால் 34.7 மில்லியன் குழந்தைகள் வயிற்றுப்போக்கு, 2.4 மில்லியன் குழந்தைகள் நிமோனியா மற்றும் 40,382 குழந்தைகள் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

எடை, உயரம் குறைவு: மேலும், போதுமான வயது வரை தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்காமல் போவதால் 26.9 சதவீத குழந்தைகள் எடை குறைவானவர்களாகவும், 31.9 சதவீத குழந்தைகள் உயரம் குறைவானவர்களாகவும், 18.8 சதவீத குழந்தைகள் தசை சுருங்கிய நிலையில் இருப்பதாகவும் ஆய்வுகளின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.

மருத்துவமனை பிரசவங்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், தாய்ப்பாலூட்டலின் விகிதத்தை அதிகப்படுத்த தேவையான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டியது மிக அவசியம். தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவுக்கு மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.

பணி செய்யும் இடங்களில் தாய்ப்பால் கொடுக்க தேவையான வசதி இல்லை. செயற்கை பால் பவுடர் பற்றிய வணிகரீதியான விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படாதது தான் தாய்ப்பாலுட்டல் குறைவுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

இந்தியாவில், ஐஎம்எஸ் சட்டத்தின்படி (குழந்தைகளுக்கான உணவுப்பொருள் மற்றும் உணவு பாட்டில்கள் விளம்பரப்படுத்துதல் தடைச்சட்டம் 1992, மற்றும் திருத்தச் சட்டம் 2003) செயற்கை பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களை ஊக்குவிப்பது குற்றமாகும். ஆனால், இன்றளவும் சட்ட மீறல்கள் அதிகமாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மீறலில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

தாய்ப்பாலின் நன்மைகள் குறித்தும் செயற்கை பால் பற்றிய தீமைகள் குறித்தும், ஐஎம்எஸ் சட்டம் குறித்தும் அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். தாய்ப்பாலூட்டல் ஆலோசகர்களை மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும்.

தாய்ப்பால் வங்கி: மருத்துவமனைகளில் தாய்ப்பாலூட்டல் கண்காணிப்பு குழுவை நியமித்து 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு நடத்த வேண்டும். அனைத்து மகப்பேறு மருத்துவமனைகளிலும் தாய்ப்பால் வங்கியை நிறுவ வேண்டும்.

தாய்ப்பாலூட்டல் பற்றிய ஆலோசனைகளை அனைத்து கர்ப்பிணிகளுக்கும் வழங்க வேண்டும். தாய்ப்பாலூட்டலில் உள்ள குறைகளை களைய அனைவரும் உறுதுணையாய் இருக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE