நடப்போம், நலம் பெறுவோம் திட்டத்தை ஆய்வு செய்த ஆட்சியர் @ தென்காசி

By த.அசோக் குமார்

தென்காசி: தென்காசியில் செயல்படுத்தப்பட்டு வரும் நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு செய்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டச் செயல்பாடுகளில் ஒன்றான நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் கடந்த ஆண்டு (2023) மாவட்ட தலைநகரங்களில் தொடங்கப்பட்டது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் 8 கிலோ மீட்டர் நடை பயிற்சி மையம் குற்றாலம் மின்நகர் பகுதியில் உள்ளது.

இங்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் இன்று ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடை பயிற்சி மேற்கொண்டார். மேலும் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் அதனைச் சார்ந்த பரிசோதனைகளின் மருத்துவ முகாம் நடைபெறுவது மற்றும் பயனாளிகள் பற்றிய விவரங்களை ஆய்வு செய்தார்.

அப்போது ஆட்சியர் கூறும்போது, “நடப்போம் நலம் பெறுவோம் திட்டமானது தமிழக முதல்வரால் கடந்த ஆண்டு ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு தொற்றா நோய் பரிசோதனைகளை மேற்கொண்டு எதிர்காலங்களில் தொற்றா நோய்களின் சதவீதத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டு பயன்பெற வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் (பொறுப்பு) கீதா ராணி, சுகாதாரத்துறை அலுவலர்கள், நடைபயிற்சி மேற்கொள்வோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE