‘விவசாயிகளை அரசாங்கம் அடிமையாக நினைக்கிறது’ - அய்யாக்கண்ணு வேதனை

By காமதேனு

விவசாயிகளை தேர்தல் நேரத்தில் நாட்டின் முதுகெலும்பாக நினைக்கும் அரசுகள், தேர்தலுக்குப்பின் அடிமைகளாக கருதுவது வேதனை அளிக்கிறது என தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டை, ஆனந்தகுடி, அருண்மொழித்தேவன் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மயிலாடுதுறை மாவட்டத்தை மழையால் பாதித்த மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். அமைச்சர்கள் உள்ள மாவட்டங்களில் 50 கோடி, 60 கோடி என காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் அமைச்சர் இல்லாத மாவட்டமாக உள்ளதால் கடந்த ஆண்டு பயிர்க்காப்பீடு செய்தவர்களுக்கு குறைந்த இழப்பீட்டுத் தொகையே வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம். அதற்கும் உடன்படவில்லை என்றால் சென்னையை முற்றுகையிடுவோம்.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களை முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூபாய் 30,000 நிவாரணமாக வழங்க வேண்டும். தேர்தல் வந்தால் நாட்டின் முதுகெலும்பாக நினைக்கும் அரசுகள், தேர்தலுக்குப்பின் விவசாயிகளை அடிமைகளாக கருதுவது வேதனை அளிக்கிறது" என்றார். அப்போது, சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ. ராமலிங்கம், மாநிலச் செயலாளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE