வேதாரண்யம்
ஒரு ஜெராக்ஸ் கடை வாசலில்...
“என்ன மாப்ள இது... ஆதார் ஜெராக்ஸ்ல உன் போட்டோவுக்கு மாஸ்க் வரைஞ்சிருக்கே?!”
“லோன் வாங்கதான் மாம்ஸு... மாஸ்க்டு ஆதாரை கொடுக்குறதுதான் பாதுகாப்புன்னு அறிவிச்சிருக்காங்களே! அதான்...”
“அறிவுக் கொழுந்து! மாஸ்க்டு ஆதாருங்கிறது ஆதார் நம்பரை மறைச்சி கடைசி நாலு நம்பரை மட்டும் காட்டுறதுதான். இவ்வளவு தத்தியா இருந்தா உன்ன நம்பி எப்படிடா லோன் கொடுப்பாங்க பேங்க்ல?”
(தலையில் அடித்துக்கொள்கிறார்!)
-ந.விஜய்ஆனந்த்,
தோப்புத்துறை
தஞ்சை
மளிகைக் கடை ஒன்றில்,,,
“தக்காளி இல்லையா அண்ணாச்சி?”
“இருக்கு தம்பி! 100 இருபது ரூபா... எவ்வளவு வேணும்?”
“பரவாயில்லையே... சீப்பாத்தான் இருக்கு. எனக்கு நூறெல்லாம் வேண்டாம்... ஒரு அஞ்சாறு பழம் போதும்!”
“நக்கலு... தக்காளி அதோ இருக்கு... கண்ணால பார்த்துட்டு நடையக் கட்டு தம்பி. ஏதாவது சொல்லிடப்போறேன்.”
-வி.ரேவதி,
தஞ்சை
சென்னை
ராயப்பேட்டையில் இரு நண்பர்கள்...
“மாப்ள இனி ஃபிரிட்ஜ் இல்லாத ஓட்டலுக்குத்தான் சாப்பிடப் போகணும்!”
“இது என்ன புது கண்டுபிடிப்பு?”
“ஃப்ரிட்ஜ் இருக்கிறதாலதானே பழைய சிக்கன், மட்டனை எல்லாம் உள்ள வைச்சு மறுநாள் நம்ம தலையில கட்டுறாங்க?!”
“சாப்பிட்டுக் கையக் கழுவப்போற நேரத்துல கலவரத்தை ஏற்படுத்துறியே... நல்லா இருப்பியாடா நீ?”
- எ.எம்.எம்.ரிஸ்வான்
சென்னை