கலைஞர்களுக்கு மீண்டும் ரயில் கட்டணச் சலுகை: பூச்சி எஸ்.முருகன் கோரிக்கை

By காமதேனு

தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம் நேற்று கோரிக்கைக் கடிதம் ஒன்றை அளித்தார்.

அதில், ‘நமது நாட்டுப்புற இசை, நடன, நாடகக் கலைஞர்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையேயும் பாரம்பரியக் கலைகளைப் போற்றிக் காத்துவருகின்றனர். குறிப்பாக கரோனா ஊரடங்கு காலகட்டத்துக்குப் பின்னர் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையிலும் கலையைக் காப்பாற்றி வருகின்றனர்.

இந்திய ரயில்வே துறை 51 பிரிவின்கீழ் பொதுமக்களுக்குக் கட்டணச் சலுகையினை வழங்கிவந்தது. இந்தச் சலுகைகளினால் ஆசிரியர்கள், விருது பெற்றவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற பல தரப்பினர் பலன் அடைந்துவந்தனர். கடந்த 2020 மார்ச் மாதம் கரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் தொடங்கியபோது மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், மாணவர்கள் உள்ளிட்ட அவசியமான 11 பிரிவினருக்கு மட்டும் கட்டணச் சலுகை அனுமதிக்கப்பட்டது. இதர பிரிவினருக்கான பயணச் சலுகைகள் நிறுத்தப்பட்டன.

கலைஞர்கள் என்ற பிரிவில் இதுவரை ரயில் கட்டணச் சலுகையைப் பெற்றுவந்த கிராமிய இசை, நடன, நாடகக் கலைஞர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக சொற்ப தொகையையே வருமானமாகப் பெறும் அவர்கள் அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், பொருட்காட்சிகளில்கூட நிகழ்ச்சி நடத்த செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது’ என்று பூச்சி எஸ். முருகன் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், வறுமையில் சிரமப்படும் கலைஞர்களுக்கு ரயில் கட்டண சலுகை மீண்டும் தொடர ரயில்வே அமைச்சரிடம் ஆவன செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE