வேதாரண்யம்
காய்கறி கடை ஒன்றில்...
“ஏம்பா இது ஒரிஜினல் தக்காளிதானே? பிளாஸ்டிக் அரிசி பிளாஸ்டிக் முட்டை மாதிரி இல்லையே?"
“என்ன சார்! தக்காளியிலயும் போலி வந்துடுமோனு பயப்படுறீங்க போல.”
“பின்னே... தக்காளி விக்கிற விலைக்கு கலர் ஜெராக்ஸ் எடுத்துக்கூட விற்பாங்க. நாங்கதானே ஜாக்கிரதையா இருக்கணும்!”
-ந.விஜய்ஆனந்த்,
தோப்புத்துறை
நாகப்பட்டினம்
பெருமாள் கோயில் அருகிலுள்ள டீக்கடையில்...
“பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி என்னண்ணே நினைக்கிறீங்க?"
“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுன்னு நெனச்சு, அதிகமா ஏத்துன விலையை லைட்டா குறைச்சிருக்காங்க தம்பி..."
“ஓஹோ! அதான் நுரை ததும்ப நீங்க தர்ற டீயும் முக்கால் கிளாஸா இருக்குதோ?!”
“அரசியல் பேசுற மாதிரி சைடு கேப்ல என்னையே ஓட்டுற பார்த்தியா!"
-சு.மூன் சுதாகரன்,
வானவன்மகாதேவி
திருச்சி
பேருந்து நிலையம் அருகே இரு நண்பர்கள்...
“என்ன மச்சான்... நேத்து உங்க கட்சிக்காரங்களோட சேர்ந்து அறவழிப் போராட்டத்துக்குப் போனியே... போராட்டம் வெற்றியா?”
“அதை ஏன் கேட்கிற? போறதுக்கு முன்னால லைட்டா ஒரு கட்டிங் விட்டேன். கிர்ர்ருன்னு ஆகிடுச்சு. பாதி வழியிலயே திரும்பிட்டேன்.”
“அப்ப உனக்கு மட்டும் அரைவழிப் போராட்டம்னு சொல்லு!”
- ஆர். பிரசன்னா
ஸ்ரீரங்கம்