‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’… வாசிக்கப்பட்ட பேண்ட் வாத்தியம்: ரசித்த முதல்வர் ஸ்டாலின்!

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை தாவரவியல் பூங்காவில் 124 -வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்க் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 124 -வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மலர்கள் மற்றும் சிறப்பு அலங்காரங்களைப் பார்வையிட்ட அவர், தோடர், கோத்தர் மற்றும் ஓடிசி கலை நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்களுடன் அமர்ந்து கண்டு ரசித்தார்.

பின்னர் பூங்காவின் பிரசித்தி பெற்ற இத்தாலியன் பூங்காவுக்கு முதல்வரும், அவரது மனைவி துர்காவும் சென்றனர். அங்கு உள்ள பிரசித்தி பெற்ற பேண்ட் ஸ்டாண்டில், வெலிங்டன் ராணுவத்தின் பேண்ட் இசைக்குழு பிரத்யேகமாக இசையை இசைத்தனர். அவர்களின் பேண்ட் வாத்திய இசையை அங்குள்ள காட்சி கோபுரத்தில் கண்டு ரசித்தார் முதல்வர் ஸ்டாலின்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், கீழே இறங்கி அவர்களிடம் வந்ததும், பேண்ட் வாத்திய குழுவினர், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ பாடலை டைமிங்கில் இசைக்க புன்னகை பூத்தார். அவரது மனைவி துர்கா அதை வெகுவாக ரசித்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்ட முதல்வரை நோக்கி சுற்றுலாப் பயணிகள் ஆரவாரம் செய்ய, அவர்களை நோக்கி கை அசைத்தும், வணக்கமும் தெரிவித்தார். மேலும், அங்கிருந்த சிலரிடம் மனுக்களை பெற்றதோடு, கை குலுக்கினார். முதல்வருடன் நீலகிரி எம்பி ஆ.ராசா மற்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE