கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை#TNBudget2022

By காமதேனு

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசுகையில், ``தமிழக அரசால் செயல்படுத்தப்படும் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்குத் தொகையினை குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும். இதற்கென 2022-23-ம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கரும்பு விவசயிகள், விவசாய சங்கங்களின் கரும்பு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை பரிசீலனை செய்து, கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், சென்ற ஆண்டினைப் போலவே, 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகை கரும்பு டன் ஒன்றிற்கு 195 ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு லட்சத்துக்கு 20 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.

கரும்பு சாகுப‌டி மேம்பாட்டுத்திட்டம்

கரும்பு விவசாயிகளின் சாகுபடி செலவைக் குறைக்கும் நோக்குடன் வல்லுநர் விதைக்கரும்பு, திசுவளர்ப்பு நாற்றுகள், பருசீவல் நாற்றுகள், ஒரு பருவிதைக்கரும்பு, உயிர் உரங்கள், கரும்பு சோகை உரிக்கும் கருவிகள், நீரில் கரையும் உரங்கள், ஒட்டுண்ணி அட்டைகள் ஆகியவற்றை வழங்குதற்கும், கரும்பு சோகையை தூளாக்குவதற்கும், ஹைட்ராலிக் டிம்ளர் நிறுவுவதற்குமான திட்டம் வரும் நிதி ஆண்டில் 10 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE