தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பான நாடு இந்தியா!

By என்.சுவாமிநாதன்

இந்தியாவின் மாகே யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் நஜிரா நௌஷத்(33). “தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பானது” என்னும் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் இவர், இதற்காக 50 நாட்கள் தனிநபர் சுற்றுலாவாகப் பயணம் செய்துவருகிறார். நஜிரா, பிரசித்தி பெற்ற பயண வலைப்பதிவரும் ஆவார்.

கடல்மட்டத்தில் இருந்து மிகவும் தாழ்வான பகுதியான கேரளத்தின் குட்டநாடு பகுதியில் இருந்து, கடல் மட்டத்தில் இருந்து உயரமான பகுதியான நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரம் வரை இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் நஜிரா.

இதுகுறித்து நஜிரா கூறும்போது, “குட்டநாட்டில் உள்ள மான்கொம்பு பகுதியில் இருந்து இந்தப் பயணத்தை கடந்த 9-ம் தேதி தொடங்கினேன். என் கணவர் ஓமன்நாட்டில் வேலைசெய்து வருகிறார். எனக்கு 5 குழந்தைகள். இதுபோன்ற பயணத்தின்போது, என் குழந்தைகளை அம்மாவின் வீட்டில் விட்டுவிடுவேன். பெண்கள் தனியாக பயணம் செய்வது பாதுகாப்பில்லை என்பதாகத்தான் பொதுப்புரிதல் உள்ளது. ஆனால், அப்படியில்லை என்பதை நிரூபிக்கவே இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன்.

இந்தப் பயணத்தைத் தொடங்கும்போதே ரயில், பேருந்து, விமானம் என எதையும் பயன்படுத்தக் கூடாதென தீர்க்கமாக முடிவெடுத்தேன். கிடைக்கும் வாகனங்களில் பயணித்து, பயணதூரத்தை அடைவது என தீர்மானித்திருந்தேன். அது லாரி தொடங்கி, சரக்கு வாகனமாக வேண்டுமானாலும் இருக்கட்டும் என முடிவெடுத்தேன். இப்படியான பயணம்தான் பண்பட்ட மனிதரை உருவாக்கும். திட்டமிடப்படாத எந்த ஒரு பயணமும் பல்வேறு வகையான கலாச்சாரங்களையும், மனித மனங்களையும் நம்மை உணரச்செய்யும்.

இந்தப் பயணத்தின் மூலம் பல்வேறு மக்களின் உணவுக் கலாச்சாரத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் நிறைய சவால்கள் இருப்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். ஆனாலும் இந்தியாவில் தன்னிச்சையாகப் பெண்கள் பயணிப்பது பாதுகாப்பானது என்பதை உணர்த்தவே, இந்தப் பயணம் மேற்கொள்கிறேன்.

இரவு நேரங்களில் நான் இடைமறித்து வாகனங்களில் ஏறிக்கொள்ளும் குடும்பங்களுடன் தங்கிக்கொள்கிறேன். ஓமன் நாட்டில் என் கணவருடன் வசித்து வந்த நானும் குழந்தைகளும், கடந்த ஆண்டு இந்தியா திரும்பினோம். கடந்த ஆண்டு 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களுக்கு 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் காரில் பயணித்தேன். அதுதந்த உற்சாகமே இந்த பயணத்துக்கு தூண்டுதலாக அமைந்தது. இந்தப் பயணத்துக்கு என் கணவர் மற்றும் அம்மா மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து, ஊக்குவிக்கவும் செய்கிறார்கள். இந்தப் பயணம் இலக்கை அடைய இன்னும் 15 நாட்கள் ஆகும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE