புதுமையான கிராஃபிக்ஸ் நாவல்: தல தோனியின் சூப்பர் ஹீரோ அவதாரம் !

By காமதேனு

புதிதாக வெளியாக உள்ள கிராஃபிக்ஸ் படைப்பான ‘அதர்வா - தி ஆரிஜின்’ என்ற நாவலுக்காக, சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் எம்.எஸ்.தோனி.

கிரிக்கெட்டுக்குப் பிறகு விளம்பர படங்களில் ஆர்வம் காட்டி வந்த தோனி, புதுமை படைப்பான கிராபிக்ஸ் நாவல் ஒன்றில் சூப்பர் ஹீரோவாக தோன்றி உள்ளார். இது குறித்த அறிவிப்பினை தோனி வெளியிட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் அவற்றை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். தோனி ரசிகர்கள் மட்டுமன்றி காமிக்ஸ் பிரியர்களுக்கும் இந்த புதுமையான படைப்பு சுவாரசியம் தரக்கூடியது என அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் வெளியாக இருக்கும் ‘அதர்வா - தி ஆரிஜின்’ என்ற பிரமாண்ட கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. சூப்பர் ஹீரோ அவதாரத்துடன் போர்ப்படை தலைவராகவும் இந்த கிராஃபிக் நாவலில் தோனி தோன்றுகிறார்.

அதர்வாவின் மாய உலகுக்கான படைப்பை உருவாக்கியதன் பின்னணியில், அதன் படைப்பாளிகளின் பல ஆண்டு உழைப்பு அடங்கி உள்ளது. ‘அதர்வா - தி ஆரிஜின்’ கதையை ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதியுள்ளார். உயிரோட்டமான வண்ணப்படங்களை வேல் மோகன் என்பவர் தலைமையிலான வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் அசோக் மேனர் ஆகியோர் உருவாக்கி உள்ளனர்.

இந்த புதுமை படைப்பு குறித்து தோனி கூறும்போது, ‘அதர்வா - தி ஆரிஜின் கதையில், சமகாலத்திய தொடர்புடன் இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தி உள்ளனர். படைப்பாளிகளின் ஐடியாவை கேட்டதுமே அதில் ஈர்க்கப்பட்டு ஆர்வத்துடன் என்னை இணைத்துகொண்டேன்’ என்றார். எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணி கூறுகையில், ‘அதர்வா -தி ஆரிஜின் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவுத் திட்டம். ஒரு சிறு ஐடியாவை உயிர்ப்பிக்க நாங்கள் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்துள்ளோம். அதர்வாவாக பங்கேற்கும் தோனி அந்த கதாபாத்திரத்துக்கு நெருக்கமாக உயிர் கொடுத்துள்ளார்’ என்றார்.

புதுமைகள் கூடிய வித்தியாசமான முயற்சியாகிய ‘அதர்வா- தி ஆரிஜின்’ படைப்பு, இந்திய நாவல் உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க உள்ளதாகவும் இதன் படைப்பாளிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE