நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய கோரிக்கை

By கரு.முத்து

நெல் கொள்முதலுக்கு இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையால் பல குழப்பங்கள், சிக்கல்கள் ஏற்படுவதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளங்கீரன்

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.வீ.இளங்கீரன், இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

“2022-ம் ஆண்டுக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நெல் கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. அத்தகைய குளறுபடிகளால், வெளிச்சந்தையில் விவசாயிகள் 63 கிலோ சன்னரக நெல்லை ரூ.1,050 என்ற அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ சன்னகரத்துக்கு 836 ரூபாய் அரசு அறிவித்துள்ளது. அங்கு தங்கள் நெல்லை விற்பனை செய்ய வேண்டும் என்றால், விவசாயிகள் முதலில் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, மீண்டும் கிராம நிர்வாக அலுவலரின் அனுமதிபெற்றுப் பதிவு செய்யப்பட்டுள்ள நேரத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்யும் நிலை உள்ளது.

இதில் உள்ள நடைமுறை சிக்கல்களால் வெளிச்சந்தை வியாபாரிகளுக்கும் இடைத் தரகர்களுக்கும் நெல்லை விற்பனை செய்யும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். குத்தகை சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகளும் இதனால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

அவர்கள் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வேண்டுமென்றால், கிராம நிர்வாக அலுவலர் மூலமாக அடங்கல் தேவைப்படுகிறது. அந்த அடங்கல் பெற குத்தகை சாகுபடி செய்த விவசாயிகள் அவர் பெயரிலேயே நேரடியாக பயிர் காப்பீடு செய்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான குத்தகை விவசாயிகளின் பெயர்களில் காப்பீடு செய்வதில்லை. நில உரிமையாளர்களே அடங்கல் பெற்று காப்பீடு செய்து கொள்கிறார்கள். இதனால் விற்பனை செய்ய அடங்கல் சான்றிதழ் பெற முடியாமல், விவசாயிகள் பெரும் துன்பத்தை சந்திக்கவேண்டி உள்ளது.

இந்நிலை காவிரி டெல்டா பகுதி முழுவதும் நீடிக்கிறது. எனவே, எந்த நிபந்தனையுமின்றி கடந்த ஆண்டைப்போல நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நேரடியாக நெல்லை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். இதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைவதோடு, விலை வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும். எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று இளங்கீரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE