நீல பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்‘ நாவல் ரஷ்ய மொழியில் மொழிபெயர்ப்பு!

By என்.சுவாமிநாதன்

‘இலை உதிர்காலம்’ என்னும் நாவலுக்காக, கடந்த 2007-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுபெற்ற திருவனந்தபுரம் நீல பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’ என்னும் நாவல், ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1970-ம் ஆண்டு வெளிவந்த பள்ளிகொண்டபுரம் நாவல், ஏற்கெனவே ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இதேபோல் நேஷ்னல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் ஆதான் பிரதான் திட்டத்தின்கீழ் இந்தி, மலையாளம், உருது, பஞ்சாபி, மராட்டி, குஜராத்தி, தெலுங்கு, ஒரியா, வங்கம், ஆஸாமீஸ், கன்னடம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இப்போது, இந்திய மொழிகளுக்கு வெளியேயும் பள்ளிகொண்டபுரம் கவனம் குவித்துள்ளது.

இந்நாவலை டாக்டர் லூபா பைச்சினா என்பவர் ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். திருவனந்தபுரத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய நாவல் என்றாலும், கதையில் ஒரு இடத்திலும் திருவனந்தபுரம் என பெயர் குறிப்பிட்டு இருக்காது. அதேநேரத்தில் கதை ஓட்டம் திருவனந்தபுரத்தை கண்முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தும்.

20 நாவல்கள், 10 கட்டுரைத் தொகுப்புகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், ஆங்கிலக் கட்டுரைகள், பத்துக்கும் அதிகமான சிறுகதைத் தொகுப்புகள் என எழுதிக் குவித்திருக்கும் நீல பத்மநாபனின் இலக்கிய வாழ்வில், இது புதிய சாதனை. இதுகுறித்து நீல பத்மநாபன் கூறும்போது, ‘‘மதுரையில் தமிழ் மாநாட்டின்போது தான், இந்நாவலை மொழிபெயர்ப்பு செய்திருக்கும் டாக்டர் லூபாவை முதன்முதலாக சந்தித்தேன். அவர் தமிழும் கற்றிருக்கிறார். அப்போதே பள்ளிகொண்டபுரம் நாவலை படித்திருப்பதாகச் சொல்லி சிலாகித்தார். நேரடியாக திருவனந்தபுரத்துக்கு வந்தவர், அனந்த பத்மநாபசாமி கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றார். நாவலில் அதைப்படித்திருக்கிறார். மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும், ஆலய விதிப்படி சேலை கட்டி பாரம்பர்ய உடையில் கோயிலுக்கு வந்தார். வெளியில் வந்ததும் இந்துக் கலாச்சாரம் பிடித்திருக்கிறது. ஆலயத்துக்கு சாப்பிடாமல்தான் வந்தேன் எனச் சொல்லி ஆச்சர்யம் ஊட்டினார். அந்த அளவுக்கு நாவல் அவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

1970-ல் வெளியான இந்நாவல் 50 ஆண்டுகள் கழித்து, இப்போது ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சந்தோசம் தருகிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘இலை உதிர்காலம்’ நாவலுக்குப் பின், நான் நாவல்கள் எழுதவில்லை. கவிதைப்பக்கம் வந்துவிட்டேன். என் எழுத்துலகப் பயணம் தொடங்கியதும் கவிதைகளில் இருந்துதான்! 83 வயது ஆகிவிட்டது. அதனால் நாவலை வடிக்கும் ஞாபகசக்தியில் சிறுதேக்கத்தை உணர்கிறேன். இலை உதிர்காலத்தில் வயோதிகர்களின் உலகையே எழுதியிருப்பேன். இப்போது நான் வயோதிகத்தில் இருக்கும்போதுதான் அதில் எழுதப்படாத பிரச்சினைகள் இன்னும் இருப்பதாக உணர்கிறேன். இப்போது காத்திரமான கவிதைகள் எழுதிவருகிறேன்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE