“சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தனுக்கெல்லாம் கிடைக்காத விருது... சிறு கூச்ச உணர்வு இருக்கிறது!”

By காமதேனு

2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்காக அம்பை இந்த விருதைப் பெறுகிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட இந்நூல், அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு ஆகும். 13 கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை.

சி.எஸ்.லட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட அம்பை, புனைவெழுத்தில் பெண் இருப்பைக் காத்திரமாகப் பதிவுசெய்த எழுத்துக்குச் சொந்தக்காரர். ‘சிறகுகள் முறியும்’, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ போன்ற சிறுகதைத் தொகுப்புகளின் வழியே இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியவர். ‘காட்டில் ஒரு மான்’. ‘சக்கர நாற்காலி’ உள்ளிட்ட படைப்புகளை எழுதியவர். இவரது படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

மும்பையில் வசித்துவரும் அம்பை, பெண் எழுத்தாளர்கள், அளுமைகளை அடையாளம் கண்டு அவர்களின் நேர்காணல்களை ஆவணங்களாகத் தொகுத்து ஒரு ஆவணக் காப்பகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்கென ‘ஸ்பாரோ’ விருதுகளை உருவாக்கித் தமிழிலும் பிற மொழிகளிலும் எழுதுகிற படைப்பாளிகளை ஒவ்வொரு ஆண்டும் கவுரவித்து வருகிறார்.

சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவது குறித்து அம்பையிடம் கேட்டபோது, “விருது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றுதான் எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு முன்பு எத்தனையோ மூத்த எழுத்தாளர்களுக்கு இந்த விருது கிடைக்கவே இல்லையே! சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன் போன்றோருக்குக் கிடைக்கவில்லை. எனவே, ஒரு புறம் இந்த விருது கிடைத்திருப்பதில் சந்தோஷமாக இருந்தாலும், சிறு கூச்ச உணர்வும் இருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE