நம்பிக்கை:
"ஆட்டோவில் பயணம் செய்தால் சுகப்பிரசவம் நிச்சயம்."
உண்மை:
"ஆட்டோவில் பயணிப்பதால் சுகப்பிரசவம் ஆகிறதோ இல்லையோ, இடுப்பு வலி ஏற்படுவது நிச்சயம். உபயம்: இந்திய சாலைகள், அதிலும் மழை வெள்ளம் வந்த பின்" என்று ஜோக்குகளை படித்துக் கொண்டேதான் இருக்கிறோம்.
ஆட்டோவைப் பொறுத்தவரை இந்தக் கேள்வி எப்படி எழுகிறது என்பதுதான் புரியவில்லை. பொதுவாகக் கர்ப்ப காலத்தின்போது, தாய்மார்களுக்குச் சிறு பயணங்கள் குறித்த கேள்விகள் எப்போதும் இருக்கும்.
"ட்டூ வீலர் ஓட்டலாமா?, கணவருடன் ட்டூ வீலரில் பயணம் செய்யலாமா? இல்லை, காரில் போவது நல்லதா..?" என்பது தொடங்கி, ஆட்டோவும் சுகப்பிரசவமும் கேள்விவரை இவை நீடிக்கும்.
இரண்டு சக்கர வாகனங்கள் என்பது சிறுபயணங்களுக்கும், பணிக்கும் எளிதானதுதான். ஆனால், நீங்களே ஓட்டினாலும், கணவருடன் பின்னால் உட்கார்ந்து வந்தாலும் நிதானமாய், மெதுவாய், கவனமாய் பயணம் செய்வது நலம். வாய்ப்புகள் இருந்தால் கார் நல்லது. நிதானமாகச் செல்லும். பேருந்து கூட கர்ப்ப காலத்தில் சிறு பயணங்களுக்கு ஏற்புடையது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், ஆட்டோ என்பது சற்றே பெரிதான ட்டூ வீலர் மட்டுமே. அதனால், பாதுகாப்பு இதில் குறைவு என்பதைக் கருத்தில் கொண்டு, தெரிந்த டிரைவர், நிதானமாக ஓட்டக்கூடியவர் என்று தெரிந்த ஆட்டோக்களில் பயணிக்கலாம். என்றாலும், ஆட்டோ பயணத்திற்கும், சுகப்பிரசவத்திற்கும் தொடர்பு இல்லை என்பதையும் உணர வேண்டும்.