ஏசி இயந்திரத்தை சுத்தம் செய்தபோது பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு

By ரஜினி

சென்னை, பள்ளிக்கரணை சிண்டிகேட் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(66). நேற்று முன்தினம், இவரது வீட்டில் இருந்த ஏசி இயந்திரத்தில் இருந்து, இறந்த நிலையில் எலி ஒன்று கீழேவிழுந்தது. இதைப் பார்த்த ஸ்ரீதரன், உடனே ஏசியைச் சுத்தம்செய்ய கையை வைத்துள்ளார். அப்போது, ஏசியினுள் இருந்த நல்ல பாம்பு ஒன்று அவரது விரல்களில் கடித்துள்ளது. இதனால், ஸ்ரீதரன் வலி தாங்காமல் துடித்துள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள், அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

ஏசியில் பாம்பு இருப்பது குறித்து தாம்பரம் வன அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அலுவலர்கள் வந்து சுமார் 10 அடி நீளமுள்ள பாம்பைப் பிடித்துச் சென்றனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஸ்ரீதரன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பள்ளிக்கரணை போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மழைக்காலத்தில் மட்டுமல்லாமல், எப்போதும் ஏசி இயந்திரங்களை சுத்தம்செய்யும்போது மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் காவலர்கள் எச்சரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE