தூய்மைப் பணியாளர் மேரியைப் பாராட்டி ரூ.5 ஆயிரம் அன்பளிப்பு கொடுத்த எஸ்.வி.சேகர்

By காமதேனு

சென்னையில் குப்பையில் கிடந்த 100 கிராம் தங்கத்தை போலீஸில் ஒப்படைத்த, தூய்மைப் பணியாளர் மேரியின் நேர்மையைப் மதித்துப் பாராட்டி, அவருக்கு நடிகரும் இயக்குநருமான எஸ்.வி.சேகர் ரூ.5 ஆயிரம் அன்பளிப்பு வழங்கினார்.

சற்று முன்னர் மேரிக்கு இந்தத் தொகையை நேரில் வழங்கிய எஸ்.வி.சேகர், கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், ‘அன்புள்ள, மரியாதைக்குரிய மேரி அவர்களுக்கு வணக்கம். தூய்மைப் பணியாளரான உங்கள் நற்செயலைப் பாராட்டவே இக்கடிதம்.

தவறுதலாக குப்பையில் போடப்பட்ட 100 கிராம் எடையுள்ள ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை, குப்பையை பிரிக்கும்போது கண்டுபிடித்த நீங்கள், போலீஸாரை உடனடியாகத் தொடர்புகொண்டு அந்தத் தங்கத்தை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டினீர்கள். உங்களின் இந்த நல்ல மனத்தையும் குணத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பணமே முக்கியம் நேர்மையாக வாழ்வது மிகக்கடினம் என நினைக்கும் இக்காலத்தில், வறுமையிலும் ஏழ்மையிலும் வாழ்ந்தாலும் அடுத்தவர் பொருள் நமக்கு வேண்டாம் என நினைத்த உங்களின் மிகப்பெரிய நேர்மையான இச்செயலை பாராட்டி, என் தொண்டு நிறுவனத்தின் மூலமாக தங்களுக்கு இந்த 5 ஆயிரம் ரூபாயை வழங்குவதில் நானும் பெருமை அடைகின்றேன்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அனைத்து செல்வங்களையும் நோயற்ற வாழ்வையும் வழங்க ஆண்டவனை வேண்டுகின்றேன்’ என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE