லென்ஸ் சிமிட்டும் நேரம் - 9

By வனிலா பாலாஜி

பூக்களின் ரசிகையான எனக்கு, நீண்ட நாட்களாக குறிஞ்சி பூக்களை படமெடுக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் நிறைவேறாமல் இருந்தது. அது, 2018-ம் ஆண்டில் என்னுடைய கொடைக்கானல் பயணத்தில் நிறைவேறியது. அந்தப் பயண அனுபவத்தையும் அங்கு நான் எடுத்த படங்களையும் இப்பதிவில் பகிரலாம் என்று இருக்கிறேன்.

கொடைக்கானலில் தங்குவதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்துவிட்டதால், அங்கு சென்று எந்தெந்த இடங்களுக்கு போய் வருவது என்ற கேள்விகள் மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன. வழக்கமாக எல்லோரும் சென்று வரும் இடங்களுக்குச் சென்றால், மகனிடமிருந்து டோஸ் கிடைக்கும் என்று தெரியும். அவன், டிரக்கிங் செல்ல வேண்டும் என பெங்களூருவைவிட்டு கிளம்பியதிலிருந்தே சொல்லிக் கொண்டிருந்தான். என் தங்கை அண்மையில் கொடைக்கானல் சென்று திரும்பியிருந்தாள். அவளிடமும் ஐடியாக்களை கேட்டு வைத்திருந்தேன். அவள்தான், வட்டக்கானல் ட்ரெக்கிங் பற்றி சொல்லி இருந்தாள். முதல்நாள் அதிகாலையே, அங்கு செல்வது என முடிவு செய்து கிளம்பினோம்.

கொடைக்கானலில் சுற்றுவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருந்த காரின் டிரைவர் அசோக், எங்களுடன் வருவதாகக் கூறி இருந்தார். ‘டால்ஃபின் நோஸ்’ மற்றும் ‘எக்கோ ராக்’ வரை சென்று வருவது என முடிவுசெய்து புறப்பட்டோம். ட்ரெக்கிங் செல்லும் வழி சற்று குறுகலாக, மரங்களின் வேர்களே படிகளாக இருந்தது. அதிகாலை பனியுடன் டிசம்பர் குளிரும் சேர்ந்து எங்களை கொஞ்சம் வெடவெடக்கத்தான் வைத்தது. அந்தக் குளிரில், மெதுவாக, கவனமாக அந்தக் குறுகலான பாதையில் நடக்க ஆரம்பித்தோம்.

சற்று தூரம் சென்றதும், 2 பேர் கோவேறு கழுதையின் மேல் சில சாமான்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும், சின்னவர், இவர்கள் யார், ஏன் இவ்வளவு பொருட்களை கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு வருகின்றனர் என பல கேள்விகளை அடுக்கினார். அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், அசோக்தான் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.

அங்கிருந்து 9 கி.மீ தொலைவில் இருக்கும் வெள்ளக்கிவி கிராமத்திலிருந்து அவர்கள் வருவதாகவும், வாரம் ஒருமுறை அக்கிராமத்தில் கிடைக்கும் பொருட்களை இப்படிக் கழுதையில் ஏற்றிக்கொண்டு வந்து கொடைக்கானலில் விற்றுவிட்டு, தங்களுக்கு வேண்டியதை வாங்கிச் செல்வதாகவும் அசோக் சொன்னார். அதையெல்லாம் ஆச்சரியம் விலகாமல் கேட்டுக்கொண்டே நடந்து வந்தான். மலைப்பாதையில் சற்று தூரம் நடந்ததுமே கொஞ்சம் வியர்க்க ஆரம்பித்து குளிரை விரட்டியது.

அழகான காட்டுப்பூக்கள் பாதை முழுவதையும் அலங்கரித்துக் கொண்டிருப்பதை ரசித்துக் கொண்டும், என் கேமராவில் படமெடுத்துக் கொண்டும் சென்றதால் எனக்கு களைப்பு தெரியவில்லை. வழியில் ஆங்காங்கே வளர்ந்திருந்த பூக்களை காண்பித்து அவைதான் ‘நீலக்குறிஞ்சி’ என அபிஷேக் சொன்னபோது, எனது சந்தோஷத்துக்கு அளவே இல்லை. ஏனெனில், இந்த வருடம் நீலக்குறிஞ்சி பூக்கப் போகிறது என பத்திரிகையில் செய்தி வரும்போதெல்லாம், நம்மால் காண முடியுமா இப்பூவை என்ற ஏக்கம் என் மனதில். இம்முறை விட்டால், மறுபடியும் அதைப் பார்க்க 12 வருடங்கள் காத்திருக்க வேண்டுமே என்ற கவலை. முகநூலில் சில நண்பர்கள் அப்பூவை படமெடுத்துப் போட்ட பொழுது, சரி இதிலாவது பார்க்க முடிகிறதே என்று சந்தோஷம் அடைந்தேன். இப்பொழுது, நானும் அந்தக் குறிஞ்சியைப் பார்த்துவிட்டேன் என்ற திருப்தி.

பின்பு, டால்ஃபின் நோஸ் மற்றும் எக்கோ ராக் இரண்டையும் பார்த்துவிட்டுக் களைப்புடன் மேலே ஏறி வந்தோம். குறிஞ்சியை படமெடுத்து விட்டு வந்ததில், அந்தப் பயணம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அடுத்த முறை நீலக்குறிஞ்சி பூக்கும் பொழுது, மலை முழுக்க கம்பளிபோல் போர்த்தி இருக்கும் இடத்துக்குச் சென்று படமெடுக்க வேண்டும் என்ற ஆசையை எனக்குள் விதைத்துக் கொண்டு, கொடைக்கானலுக்கு விடைகொடுத்தேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE