நிழற்சாலை

By காமதேனு

நேற்றில் பூத்திருக்கும் நாளை

நேற்றைய மருதத்திற்கும்
நாளைய குறிஞ்சிக்கும் இடையே
பாலையாய்க் கிடக்கிறது இன்று.
முல்லை நெய்த பூச்சரத்துடன்
வருவாயென நானும்
முகம் திருப்பிப் பரிமாறினாலும்
உனக்குப் பிடித்த
உணவைச் சமைத்திருப்பேன்
என நீயும்…
நீரூற்றுவது
நேற்றைக்கா… நாளைக்கா,
நீயா நானா
தோற்பது யார் என்பதை
ரசித்தபடி
நேற்றின் கிளைகளில்
அமர்ந்திருக்கின்றன
நாளைய முத்தப் பூக்கள்.
- சுசித்ரா மாறன்

எண்களை என்ன செய்வது?

சில சமயங்களில்
என்னுடைய அலைபேசியில்
எண்களை
அழிக்க முற்பட நேர்கிறது,
எண்களை யாரேனும்
மாற்றியபோதும்
அவர்கள் பூமியில்
வாழாதபோதும்.
என்னுடைய எண்ணும்
அழிக்கப்படலாம்
நான் இல்லாதபோது
உங்கள் அலைபேசியில்.
- கவிநிலா கிருஷ்ணமூர்த்தி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE