நிழற்சாலை

By காமதேனு

சீப்புக்கு என்ன சிரிப்பு?

உன் கேசத்தில் களவாடிய
ஒற்றை முடியுடன்
வெற்றிக்களிப்பு.
இன்றும் அதிர்ஷ்டமில்லை
உன் ஆள்காட்டி விரலின்
தீண்டலுக்குத் தவமிருக்கும்
நாள்காட்டியின்
ராசி பலன்களுக்கு.
காத்திருக்கும்
என் உயிர்ப் பயிர்
உன் தளிர்விரல் தீண்டலில்
துளிர்விட
பொட்டல் வெளியில்
அவிழ்த்து விடப்பட்ட நாயாய்
நானும் என் தனிமையும்.
ஊன் கொத்தி
உயிர் குடிக்கிறது
புசிக்கப் புசிக்கப்
பசியைத் தூண்டும்
இந்தக் காதல்!
நீ நீயாக
இருப்பதில்தான்
இன்னும் இனிக்கிறது
இந்தக் காதல்!
- சென்னை, எஸ்.முத்துகுமார்

கனிவின் உத்தரவு

பத்துக் குடும்பங்களுக்கான
பங்காளிகள் வழிபடும் கோயிலில்
கூடியவர் ஐம்பது பேர் இருக்கலாம்.
திருவிழாவின் வாசனையைப்
பிடித்துக்கொண்டு
பலூன்காரர் வந்துவிடுகிறார்.
கடினமான மொழியை
முகத்தில் தேக்கி வைத்திருந்த
கடவுளின் முகத்தில்
கனிவு பிறக்கிறது.
உத்தரவு கிடைத்துவிட்டது என
உடுக்கை அடிக்கிறார் பூசாரி!
- ஈரோடு, ரவிமோகனா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE