சந்தைக்குப் போலாம் ஆத்தா வையுமே?!

By காமதேனு

தமிழ்நாட்ல சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் எல்லாக் கடையிலேயும் கட்டாயம் இருக்கிற, கேட்காமல் கெடைக்கிற ஒரே பொருள் ‘அது’தான். பலசரக்குக் கடை, காய்கறி, மீன்சந்தை, சூப்பர் மார்க்கெட், ஸ்டேஷனரி, மருந்துக்கடை, கார் ஷோரூம்னு எங்க போனாலும், எந்தப் பொருள் வாங்குனாலும், கொசுறா ‘அதை’யும் சேர்த்துக் கொடுத்திடுறாங்க. ‘அது’ எது? ஃபிராடுத்தனம்!

“ஏல... உன்னய எட்டணாவுக்கு தேங்காச்சில்லு வேங்கிட்டு வரச் சொன்னா, நாலணாவுக்கு வாங்கிட்டு, மிச்சத்துக்கு பெறக்கடி (தின்பண்டம்) போட்டுட்டீயா”ன்னு அம்மை அடிச்சப்ப, எனக்கு அஞ்சு வயசுகூட ஆகல. “இல்லவே இல்ல”ன்னு நான் சத்தியம் பண்ண, கடைசியில “எந்தப் பய கடையில வாங்குன?”ன்னு அம்மை கேட்டாவ. நான் அடையாளம் சொல்லவும், “ஏல... கிளிமவன் கடைக்குப் போச்சொன்னா... செவப்புராசா கடையில உனக்கென்ன சோலி?”ன்னு அதுக்கும் ரெண்டடி.

அப்பவாச்சும் சின்னப்பையன், ஏமாத்திட்டாங்க. இப்ப படிச்சி, பட்டம் வாங்கி, குடும்பத் தலைவன் ஆகிட்டேன். டெக்னாலஜியும் வளர்ந்திடுச்சி. ஆனா, காட்சி மாறலியே?!. “ஏன்யா, உன்னைய கடல் மீன் வாங்கிட்டு வரச்சொன்னா, கம்மா மீன வாங்கிட்டு வந்திருக்க. கண்ணு அவிஞ்சி போச்சா? இல்ல ஏதாவது பொம்பளையாளு கடையில வாங்குனீயா?”ன்னு நாறக்கிழி கிழிக்கிறா கட்டுனவ. கல்யாணம் முடிஞ்சி 8 வருஷம் ஆகிடுச்சி, 100 மல்லிகைப் பூன்னா, எவ்வளவு நீளம் அல்லது எத்தனை பூங்கிற ‘வியாபார ரகசியத்த’ இன்னமும் கண்டுபிடிக்க முடியல.

மார்க்கெட்ல எந்த பிராண்ட் நல்லாப் போனாலும், உடனே அதே பேர்ல ஆயிரத்தெட்டு டூப்ளிகேட் வர்றது இந்திய வழக்கம். க்ளினிக் பிளஸ் ஷாம்பு மாதிரியே ஆனால், CLNIC PLUS, CINIC PLUS என்பது மாதிரி பெயர்களில் பல டூப்ளிகேட் ஷாம்புகள் வந்திடுச்சி. சின்ன ஏவாரிங்க தான் அப்படின்னா, இந்தியா முழுக்கக் கடை போட்டிருக்கிற, ஒரு நிறுவனமும் அதே காரியத்தைத்தான் செய்யுது. அந்த நிறுவனத்தோட மதுரை ஒத்தக்கடை சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE