தலைநகரில் மகுடம் சூடும் பெண்.. டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவின் பின்னணி என்ன?

By KU BUREAU

புதுடெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்கிறார். ரேகா குப்தாவின் பின்னணி தொடர்பான விவரங்களை பார்ப்போம்.

டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில், கேஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, வீரேந்திர சச்தேவா, ரேகா குப்தா, விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாயா, அஜய் மஹாவர் ஆகியோரது பெயர்கள் டெல்லி முதல்வர் பதவிக்கு அடிபட்டன.

அதேநேரம் டெல்லிக்கு பெண் ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரை முழுமையாக பரிசீலிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் முதல்வர் பதவிக்கு ரேகா குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இன்று ராம் லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள விழாவில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்கிறார்.

யார் இந்த ரேகா குப்தா? - ஹரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள நந்தகர் எனும் கிராமத்தில், 1974-ஆம் ஆண்டு ஜூலை 19 ம் தேதி ரேகா குப்தா பிறந்தார். அவரது தந்தை வங்கி அதிகாரியாக இருந்தவராவார். 1976-ல் ரேகா குப்தாவின் குடும்பத்தினர் டெல்லிக்கு பெயர்ந்துவிட்டனர்.

டெல்லி பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோது ரேகா குப்தா ஏபிவிபி உறுப்பினரானார். பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவிலும் இணைந்தார். 1996-1997 காலக்கட்டத்தில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்தார் ரேகா குப்தா.

ரேகா குப்தா 2000-ம் ஆண்டில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பில் சேர்ந்து அதன் டெல்லி பிரிவு செயலாளராக பணியாற்றினார். அங்கே அவருடைய தலைமைப் பண்பு துரித கவனம் பெற்றது. அதன் நீட்சியாக அவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய செயலராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை அவர் 2004 முதல் 2006-ம் ஆண்டு வரை வகித்தார்.

அதன்பின்னர் 2007-ஆம் ஆண்டு அவர் டெல்லி முனிசிபல் கவுன்சில் தேர்தலில், வடக்கு பிதாம்புரா வார்டில் போட்டியிட்டு கவுன்சிலரானார். 2007 முதல் 2009 வரை டெல்லி முனிசிபல் கவுன்சிலில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு கமிட்டியின் தலைவராக இருந்தார். இவை தவிர டெல்லி பாஜக மகளிர் அணியின் பொதுச் செயலாளர், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் என்ற பதவிகளையும் பெற்றார்.

இப்போது டெல்லியில் பாஜக 27 ஆண்டுகளுக்குப் பின்னர் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று 48 எம்எல்ஏ.க்களுடன் ஆட்சியை அமைக்கிறது. டெல்லியின் முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னாள் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியின் அதிஷி சிங் ஆகியோர் டெல்லியின் பெண் முதல்வர்களாக இருந்துள்ளனர்.


50 வயதாகும் ரேகா குப்தா முதன்முறை எம்.எல்.ஏ ஆவார். டெல்லி ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் முதல்வராக பதவியேற்கிறார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE