அதானி இல்லத் திருமணத்தில் எளிமை... நன்கொடையோ ரூ.10,000 கோடி!

By KU BUREAU

அகமதாபாத்: மகன் திருமணத்தை எளிமையாக நடத்திய தொழிலதிபர் கவுதம் அதானி, சமூகநல பணிகளுக்காக ரூ.10,000 கோடியை நன்கொடையாக வழங்கி முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளார்.

தொழிலதிபரும் அதானி குழும தலைவருமான கவுதம் அதானியின் இளைய மகனும் அதானி ஏர்போர்ட்ஸ் இயக்குநருமான ஜீத் அதானிக்கும் வைர வர்த்தகர் ஜெய்மின் ஷா மகள் திவாவுக்கும் அகமதாபாத்தில் கடந்த 7ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். கடந்த ஜனவரி 21ம் தேதி பிரயாக்ராஜ் மகா கும்பாமேளா விழாவில் பங்கேற்ற கவுதம் அதானி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

அப்போது மகனின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “நிச்சயமாக இல்லை. நாங்களும் சாதாரண மக்களைப் போன்றவர்கள்தான். என் மகன் ஜீத் திருமணம் எளிமையாக பாரம்பரிய முறைப்படி நடைபெறும்” என பதில் அளித்திருந்தார். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள கவுதம் அதானி, தான் கூறியபடி ஜீத் அதானியின் திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி உள்ளார்.

இதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்கவில்லை. இதன் மூலம் மிகவும் ஆடம்பரமான முறையில் அதானி மகன் திருமணம் நடைபெற உள்ளதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அத்துடன், மகன் திருமணத்தை முன்னிட்டு, பல்வேறு சமூகநலப் பணிகளுக்காக ரூ.10,000 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

இதில் பெரும் பகுதி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் கட்டுவதற்காக வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் குறைவான செலவில் உலகத் தரத்தில் மருத்துவ வசதியும் கல்வியும் கிடைக்க வேண்டும்; இளைஞர்களின் வேலை வாய்ப்பு திறனை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் அதானியின் நோக்கம்.

இதுதவிர, ஜீத் அதானி திருமணத்துக்கு முன்னதாக, ‘மங்கள் சேவா’ என்ற திட்டத்தை கவுதம் அதானி தொடங்கி வைத்தார். இதன்படி, ஜீத் அதானி-திவா தம்பதி ஆண்டுதோறும் திருமணமான 500 மாற்றுத் திறனாளி பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE