“நாக சைதன்யா - சமந்தா விவாகரத்துக்கு சந்திரசேகர் ராவ் மகனே காரணம்” - தெலங்கானா அமைச்சரால் பரபரப்பு!

By KU BUREAU

ஹைதராபாத்: நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ஆர் தான் காரணம் என தெலங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா குற்றம்சாட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமராவ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அம்மாநில அமைச்சர் கொண்டா சுரேகா, பல நடிகைகள் சினிமாவை விட்டு விலகி, சீக்கிரமே திருமணம் செய்துகொள்ள அவர்தான் காரணம் என்று கூறினார்.

மேலும், கே.டி.ராமராவ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், திரையுலகப் பிரமுகர்களை மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தனக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல் பதிவுகளுக்குப் பின்னால் கேடிஆர் இருப்பதாக சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.

அமைச்சர் சுரேகாவின் கருத்துகளுக்கு நாக சைதன்யாவின் தந்தையான நடிகர் நாகார்ஜுனா கடுமையான பதிலை அளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், " அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை உங்கள் எதிரிகளை விமர்சிக்க பயன்படுத்தாதீர்கள். மற்றவர்களின் அந்தரங்கத்தை மதிக்கவும்" என அவர் கூறியுள்ளார்

மேலும், “பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை மற்றும் தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE