பெங்களூரு தோசை, மும்பை பாவ் பாஜி... இந்தியாவில் சுந்தர் பிச்சைக்கு பிடித்ததில் தமிழ் உணவு இல்லாதது ஏன்?

By காமதேனு

கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அண்மையில் தனக்கு பிடித்த இந்திய உணவு ரகங்கள் குறித்து பேசுகையில், தோசை, சோலா பூரி மற்றும் பாவ் பாஜி ஆகியவற்றை வெகுவாக சிலாகித்து இருந்தார்.

இந்தியாவில் பிறந்து கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்திருக்கும் சுந்தர் பிச்சையின் விருப்பமான இந்திய உணவுகளின் பட்டியல் என்பது, வழக்கமான பணக்கார உணவு வகைகளுக்கு மாறாக அமைந்துள்ளது. வடஇந்தியாவில் பிரபலமான யூடியூபர் வருண் மய்யாவுக்கு அளித்த பேட்டியில், வெவ்வேறு இந்திய நகரங்களின் 3 விதமான உணவுகளை, தனக்குப் பிடித்ததாக சுந்தர் பிச்சை பட்டியலிட்டார்.

பாவ் பாஜி

”நான் பெங்களூரில் இருந்தால் தோசை சாப்பிடவும், டெல்லியில் இருப்பின் சோலா பூரி சாப்பிடவும், மும்பையில் இருப்பின் பாவ் பாஜி சாப்பிடவும் விரும்புவேன்” என்று அந்த பேட்டியில் சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.

ஏறக்குறைய 10 நிமிடங்களுக்கு நீளும் வீடியோவில், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் உட்பட பல தலைப்புகளைப் பற்றியும் சுந்தர் பிச்சை விவாதித்தார். இந்திய பொறியாளர்களுக்கு தொழில்துறையில் எவ்வாறு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்றும் அவர் சில வழிகாட்டுதல்களுடன் அறிவுறுத்தினார். அமீர்கானின் சூப்பர்ஹிட் திரைப்படமான '3 இடியட்ஸ்' பற்றிய குறிப்பை எடுத்துக் கொண்டு, கருத்துக்களை ஆழமாகப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் சுந்தர் பிச்சை விளக்கினார்.

"விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொள்வதன் மூலம் உண்மையான வெற்றி கிடைக்கும்" என்றும் அந்த பேட்டியில் அவர் கூறினார். பல இந்திய மாணவர்கள் புத்திசாலித்தனமாக இருந்தாலும், அடிப்படைகளில் கவனம் செலுத்தத் தவறிவிடுகிறார்கள் என்றும் கூறினார்.

1972-ம் ஆண்டு தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை சென்னையில் வளர்ந்தவர். ஐஐடி காரக்பூரில் உலோகவியல் பொறியியலில் பட்டம் பெற்ற இவர், கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து அதன் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமை பதவிக்கும் உயர்ந்தார்.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

தற்போது சுந்தர் பிச்சை அளித்திருக்கும் யூடியூப் பேட்டி இணையத்தில் வைரலாவதோடு, தமிழர்களால் இன்னொரு கேள்வியை எழுப்பவும் காரணமாகி உள்ளது. பெங்களூரு, டெல்லி, மும்பை என இந்திய மாநகரங்களின் உணவுகளை மெச்சிக்கொண்ட சுந்தர் பிச்சை, அவர் பிறந்து வளர்ந்த தமிழகத்தின் சிறப்புமிக்க உணவுகளில் ஒன்றைக்கூட குறிப்பிடாதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். தமிழர் உணவுகள் சுந்தர் பிச்சைக்கு பிடிக்காதா அல்லது தமிழகத்தை அவர் மறந்துவிட்டாரா என்றும் வினவி வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE