உஷார்... நீங்க புரோட்டீன் பவுடர் சாப்பிடுபவரா? ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

By காமதேனு

உடல் எடையை கூட்டுவதற்காக புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மூலம் உடலை வலுவாக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலானவர்களும் இயற்கையான உணவுகளின் வழியே உடல் எடையை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். சிலர் சந்தைகளில் சமீப காலமாக அதிகரித்துள்ள புரோட்டீன் பவுடர்கள் என்ற செயற்கை உணவு வகைகளை எடுத்துக்கொண்டு தசைகளை அதிகரித்துக் கொள்கின்றனர்.

புரோட்டீன் பவுடர்கள்

சமீபத்தில் இந்த புரோட்டீன் பவுடர்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் ஆய்வு மேற்கொண்டது. புரோட்டீன் பவுடர்கள், பொதுவாக முட்டைகள், பால், பால் பொருட்களில் இருந்து கிடைக்கும் சோயா பீன்ஸ்கள், பட்டாணி, அரிசி ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் புரோட்டீன்கள் மற்றும் குறைந்த அளவிலான கொழுப்பு, கார்போஹைட்ரேட்ஸ் ஆகியவை இந்த பவுடர்களில் இருக்கும். ஆனால் பல புரோட்டீன் பவுடர் நிறுவனங்கள், இந்த பவுடர்களில் சர்க்கரை, கலோரிகள் இல்லாத இனிப்புகள், செயற்கை நிறமிகள் ஆகியவற்றை கலப்பதாக தெரிய வந்துள்ளது. இவற்றை எடுத்துக் கொள்வதால் நீண்ட கால அடிப்படையில் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம்

புரோட்டீன் தவிர கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் உடலில் இயற்கையான உணவு செரிமானத்திற்கு மிகவும் அவசியம். ஆனால் இவ்வாறு அதிக அளவிலான புரோட்டீன்களை எடுத்துக் கொள்வதால், அது உடலுக்கு தீமை விளைவிக்கும் என தெரிய வந்திருப்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் அதிகளவு உப்பு எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும் எனவும், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை எடுத்துக் கொள்வதையும் குறைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புரோட்டீன் பவுடர்கள் எடுத்துக்கொள்ளும் உடற்பயிற்சி வீரர்

சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வது மட்டுமே உடலுக்கு முழுமையான வலிமையை தரும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. புரோட்டீன் பவுடர்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் தசைகள் அதிகரிக்கும் என்ற தவறான கருத்து உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வோருக்கும், விளையாட்டு வீரர்கள் இடையேயும் இருப்பதாக ஐசிஎம்ஆர் கவலை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE