ராகுல் காந்தியின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்ராகுல் காந்திக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதால், அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்என்று மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல்காந்தி சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக செப்.11-ம் தேதி மார்வாவில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில், பாஜக பிரமுகர் தர்வீந்தர் சிங், ‘‘ராகுல்காந்தி இது போன்ற செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது பாட்டிக்கு நடந்ததை நீங்களும் சந்திக்க வேண்டியிருக்கும்’’ என தெரிவித்திருந்தார். அதேபோல், மகாராஷ்டிராவில் ஷிண்டே கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், ‘‘காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்’’ என அறிவித்தார்.

இந்நிலையில், இந்த இரு அறிவிப்புகளையும் சுட்டிக்காட்டி, நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: பாஜக தலைவர் ஒருவர் "ராகுல்காந்தியின் பாட்டிக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேரும்" எனவும், ஷிண்டே சேனாவின் எம்எல்ஏ ஒருவர் "ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்குப் பரிசு" எனவும், இன்னபிற வகைகளிலும் மிரட்டல் விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. சகோதரர் ராகுல் காந்தியை நோக்கி மக்கள்ஈர்க்கப்படுவதும், நாளுக்கு நாள்அவருக்குக் கூடி வரும் பொதுமக்களின் ஆதரவும் பலரையும் மிரளச் செய்துள்ளதன் தொடர்ச்சியாகவே இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில்மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் நமது மக்களாட்சியில் இடமில்லை என்பதைஉறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE