ஹூடா குடும்பத்தினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரிஜ் பூஷன் சிங் விமர்சனம்

By KU BUREAU

சண்டிகர்: பாஜக முன்னாள் எம்.பி.பிரிஜ் பூஷன் சிங். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பதவி வகித்த இவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர். கடந்த 2023-ம் ஆண்டு இவருக்கு எதிராக மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனை வினேஷ் போகத் ஆகிய 2 பேர்தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அவர் பதவி விலகினார்.

இந்நிலையில், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகிய இருவரும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதையடுத்து, ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடு கிறார். இதுகுறித்து பிரிஜ் பூஷன் சிங் நேற்று கூறியதாவது:

வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா இருவரும் காங்கிரஸில் இணைந்திருக்கின்றனர். இதுமல்யுத்த வீரர், வீராங்கனைகள் எனக்கு எதிராக போராடியது காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றிய சதி என்பது நிரூபணமானது. இதற்கு ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மூளையாக செயல்பட்டுள்ளார். மகாபாரதத்தில் திரவுபதியை, சூதாட்டத்தில் தோற்றதால் பாண்டவர்களை இந்த நாடு இதுவரை மன்னிக்கவில்லை. இதுபோல, நமது சகோதரிகளின் கண்ணியத்தை சுய நலனுக்காக சமரசம் செய்து கொண்ட ஹூடா குடும்பத்தினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE