அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவேன்: ராஜீவ் பிறந்தநாளில் ராகுல் உருக்கம்

By KU BUREAU

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர் பூமிக்குச் சென்ற ராகுல், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தன் தந்தை குறித்து எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி, “அப்பா, உங்கள் போதனைகள் எனக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவை. இந்தியா குறித்த உங்கள் கனவை எனதாகக் கொண்டுள்ளேன். உங்கள் நினைவுகளை என்னுள் கொண்டபடி, உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என்று குறிப் பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராஜீவ் காந்தியின் புகைப் படத்துக்கு சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உட்பட காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மல்லிகார்ஜூனா கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், “நாட்டின் வளர்ச்சிக்கு ராஜீவ் காந்தி மிகப் பெரிய பங்களிப்பு வழங்கி இருக்கிறார். வாக்களிக்கும் வயதை 18-ஆக குறைத்தது, தொலைத் தொடர்பு மற்றும் ஐடி நிறுவனங்கள் வளர்த்தெடுக்க திட்டம் கொண்டுவந்தது, பெண்கள் மேம்பாடு, புதிய கல்விக்கொள்கை என நாட்டின் வளர்ச்சிப்போக்கில் முக்கியமான முன்னெடுப்புகளை அவர் மேற்கொண்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE