லேட்டரல் என்ட்ரி முறை மூலம் பணிநியமன அறிவிப்பு - ரத்து செய்தது மத்திய அரசு

By KU BUREAU

புதுடெல்லி: மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமன முறையை ரத்து செய்யும்படி யுபிஎஸ்சிக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசின் உயர் பதவிகளான இணைச் செயலர்கள், இயக்குநர்கள், துணை செயலாளர்கள் உள்ளிட்ட 45 பணி இடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

லேட்டரல் என்ட்ரி முறையிலான பணி என்பதால் இட ஒதுக்கீடு எதுவும் பின்பற்றப்படாது. இது சமூக நீதிக்கு எதிரான செயல் என்று எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மத்திய அரசின் இணைச் செயலர் அந்தஸ்திலான பதவிகளில் தனியார் துறையினரை நியமிக்க யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டதற்கு திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆர்ஜேடி. உள்ளிட்ட பல கட்சிகள் மட்டுமின்றி சில பாஜக கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் நேரடி அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து யுபிஎஸ்சி அமைப்பின் தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில், “2005ம் ஆண்டு வீரப்ப மொய்லி தலைமையிலான குழு, லேட்டரல் என்ட்ரி முறையை அங்கீகரித்தது. 2013ம் ஆண்டு 6ஆவது நிதி ஆயோக் கூட்டத்திலும் இது உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன்பும் ஏராளமான உயர் பதவிகள், லேட்டரல் என்ட்ரி மூலம் நிரப்பப்பட்டன. கடந்த கால அரசாங்கத்தில் யுஐடிஏஐ தலைமை உள்ளிட்ட பொறுப்புகள் இவ்வாறே நிரப்பப்பட்டன.

எனினும் வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் யுபிஎஸ்சி அண்மையில் வெளியிட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பில் இத்தகைய இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததால், அந்த விளம்பரத்தை ரத்து செய்யும்படி வலியுறுத்துகிறேன்’’ இவ்வாறு மத்திய அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE