ஹிண்டன்பர்க் Vs அதானி + செபி தலைவர் - புதிய ‘சம்பவம்’ என்ன?

By KU BUREAU

அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை கொண்டிருந்தனர் என்பது ஹிண்டன்பர்க் நிறுவனம் புதிதாக பற்றவைத்த நெருப்பு. இதற்கு மறுப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும் ‘சம்பவம்’ வலுத்து வருகிறது.

அதானி குழுமம் குறித்து 2023 ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, இந்திய பங்குச் சந்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு செபி சில வாரங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸில் ‘ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது அறிக்கையை பொதுவெளியில் வெளியிடுவதற்கு முன்பாக கிங்டன் கேபிடல் மேனேஜ்மெண்ட் என்ற முதலீட்டு நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்நிறுவனம், அதானி குழும பங்குகளை ஷார்ட் செல்லிங் செய்து லாபம் ஈட்டியுள்ளது’ என்றும் செபி குற்றம்சாட்டியது.

இந்தப் பின்னணியில், தற்போது செபியின் தலைவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிண்டன்பர்க் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

குற்றச்சாட்டு என்ன? - ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், “மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதபியும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர். இதனால் அதானியின் சந்தேகத்துக்குரிய பங்குதார நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செபி அமைப்பின் தலைவராக மாதபி புரியின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதானி குழுமம் மீதான செபியின் விசாரணை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்” என்கிறது ஹிண்டன்பர்க்.

இதன் தொடர்ச்சியாக அதானி குழுமம் வெளியிட்ட மறுப்பு அறிக்கையில், “ஹிண்டன்பர்க்கின் அறிக்கை மிகவும் தவறு. தங்கள் சுயலாபத்துக்காக, பொதுவெளியில் உள்ள தகவல்களை திரட்டி, அவற்றின் உண்மையை ஆராயாமல் உள்நோக்கத்துடன் அந்த அறிக்கையை ஹிண்டன்பர்க் உருவாக்கியுள்ளது.

ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். எங்களது அனைத்து வெளிநாட்டு முதலீடுகளும், பங்குகளும் வெளிப்படைத் தன்மையுடன் உள்ளன. ஹிண்டன்பர்க்கின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் முழுமையாக விசாரிக்கப்பட்டு, அடிப்படை ஆதாரம் அற்றவை என்று நிராகரிக்கப்பட்டவை” என்று அதானி குழுமம் குறிப்பிட்டுள்ளது.

செபி தலைவர் மறுப்பு: பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’யின் தலைவர் மாதபி புரியும், அவரது கணவரும் வெளியிட்ட அறிக்கையில், “ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. எங்களது வாழ்க்கையும், நிதி பரிமாற்றங்களும் திறந்த புத்தகம்போல வெளிப்படையானவை.

ஹிண்டன்பர்க்கின் முந்தைய அறிக்கை தொடர்பாக செபி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதற்கு பழிவாங்கும் நோக்கில், செபியின் பெயரை கெடுக்கும் வகையில் தற்போது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஹிண்டன்பர்க்கின் அறிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

‘இந்தியாவின் நடுத்தர மக்கள் தங்கள் கடின உழைப்பு மூலம் ஈட்டிய பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். தங்களை செபி பாதுகாக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், தற்போது செபியின் தலைவர் மீது மாபெரும் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்படுவது அவசியம்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

‘இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்குமா?’ என்று திரிணமூல் காங்கிரஸ் முக்கியத் தலைவர் மகுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக சொல்வது என்ன? - “உலகின் வலுவான நிதிக் கட்டமைப்பையும் வேகமாக வளரும் பொருளாதாரத்தையும் கொண்ட நாடான இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்கவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் ஹிண்டன்பர்க் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. செபியின் மீது ஹிண்டன்பர்க் நடத்தியிருக்கும் இந்தத் தாக்குதலில் காங்கிரஸும் கூட்டு.

ஒரு சில உண்மைகளைக் கூறி, பல பொய்களை அடுக்கும் காங்கிரஸ் பாணியிலேயே இந்த அறிக்கை உள்ளது. நான் ஏற்கெனவே பலமுறை கூறியுள்ளேன். காங்கிரஸின் உதவியுடன் பல சர்வதேச அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சியை குலைக்க முயன்று வருகின்றன. நாம் ஒரு போதும் இதை அனுமதிக்க கூடாது” என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE