சிறகை விரி உலகை அறி - 98; கன்றுக்குட்டியின் தோலில் ஒரு புத்தகம்

By சூ.ம.ஜெயசீலன்

புத்தகங்கள், வரலாறு சொல்லும், கற்பனை ஊட்டும், கவிதை பாடும், இன்புறச் செய்யும் என்பதை அறிவோம். வரலாறாகவே ஒரு புத்தகம் மாறியிருக்கும் அதிசயத்தை டிரினிட்டி கல்லூரியில் பார்த்தேன். ஒவ்வொரு வருடமும் 6 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அப்புத்தகத்தைப் பார்க்க வருகிறார்கள். அவர்களுள் ஒருவனாக கல்லூரி நூலகத்துக்கு முன்பு காத்திருந்தேன்.

நூலக முகப்பு

நீளமான அறை

நூலகத்தின் கட்டிடப் பணி 1712-ல் தொடங்கியது. தரைத்தளமும், சமதள கூரையுடன் ஒரு மேல் தளமும் உடைய கட்டிடத்தை 20 ஆண்டுகளில் கட்டி முடித்தார்கள். மேல் தளத்தில் அமைந்துள்ள 12 மீட்டர் அகலம், 64 மீட்டர் நீளம் கொண்ட அறை, அயர்லாந்தின் அந்நாளைய மிக நீளமான அறையாகும். அதனால், நீளமான அறை என்றே அழைத்தார்கள். இன்றளவும் அப்படியே.

பின்னாட்களில் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், 1861-இல் கூரையைப் பிரித்துவிட்டு, இரண்டாவது மேல் தளம் கட்டி, கூம்பு வடிவ கூரை அமைத்தார்கள். நூலகத்தில், 5-ம் நூற்றாண்டு முதல், 16-ம் நூற்றாண்டு வரையிலான 600 முக்கிய ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இங்குதான் The Book of Kells இருக்கிறது.

நூலகம் திறக்கும்வரை, தைவான் சிறுவர்கள் இருவரோடு விளையாடிக் கொண்டிருந்தேன். கதவு திறந்தது. மகிழ்ந்தேன். நுழைவுச் சீட்டு வாங்கினேன். கெல்ஸ் புத்தகம் உருவான வரலாற்றை அறிந்துகொள்ள, தரைத்தளத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தேன்.

நூலக வளாகத்தில்

எங்கே, எப்போது யாரால்?

ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் உள்ளது ஐயோனா (Iona) தீவு. அயர்லாந்து துறவி புனித கொலும்பா கி.பி. 563-ல் இத்தீவில் துறவு மடம் தொடங்கினார். இவரின் சீடர்கள், ஆலய பீடத்தில் வைத்து வழிபடுவதற்காக விவிலியத்தின் சில பகுதிகளை கைப்பட எழுதினார்கள். எந்த ஊரில் எழுதப்பட்டதோ அதுவே அதன் பெயராக மாறியது. உதாரணமாக, துரோவ் நகரில் கி.பி.700-ல் எழுதப்பட்டது Book of Durrow, 8-ம் நூற்றாண்டில் திம்மா நகரில் உருவானது, Book of Dimma, கி.பி.807-இல் அர்மாக் நகரில் தயாரானது Book of Armagh. அவ்வாறு, கெல்ஸ் நிலப்பகுதியில் கி.பி. 800-ல் எழுதப்பட்ட புத்தகமே, Book of Kells.

வைக்கிங்ஸ்களின் படையெடுப்பு மற்றும் பல்வேறு தீ விபத்துகளில் இருந்து காப்பாற்றப்பட்ட, பல்வேறு கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட கெல்ஸ் புத்தகம், 1653-ல் டப்ளினுக்கு வந்தது. 1661 முதல், டிரினிட்டி கல்லூரியில் பாதுகாக்கப்படுகிறது.

கெல்ஸ் புத்தகம்

தோலில் வாழும் நம்பிக்கை

விவிலியத்தில் புதிய ஏற்பாட்டு நூலின் தொடக்கத்தில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் எனும் 4 புத்தகங்கள் உள்ளன. இதில் இயேசுவின் நிகழ்கால வாழ்வு எழுதப்பட்டுள்ளது. இந்த 4 புத்தகங்களையும் எழுதி நகலெடுத்து, படங்கள் வரைந்ததுதான் கெல்ஸ் புத்தகம்.

கெல்ஸ் புத்தகம் காகிதத் தாளில் அல்ல, மாறாக பெருமதிப்புமிக்க வளமாக அக்காலத்தில் விளங்கிய கன்றுக்குட்டிகளின் தோலில் (Vellum) எழுதப்பட்டுள்ளது. கன்றுக்குட்டிகளின் தோலை சுண்ணாம்பு அல்லது சாணத்தில் புதைத்து வைத்து, பிறகு கத்தியால் சுரண்டி அதன் முடிகளை நீக்கினர். ஒரு சட்டகத்துக்குள் தோலை இழுத்து விரித்து வைத்தனர். பிறகு, அரைவட்ட லுனா (Luna) கத்தியால் மீதம் இருந்த முடிகளையும் கசடுகளையும் நீக்கினர். முடியின் நுண் குமிழ்களைப் இப்போதும் பார்க்கலாம். இப்புத்தகத்துக்கு ஏறக்குறைய 185 கன்றுக்குட்டிகளின் தோல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தரமாக இருந்ததோ இல்லையே, கிடைத்த தோல்களைப் பயன்படுத்தியதால், சில இடங்களில் தோல் உரிந்து துளை விழுந்துள்ளதைப் பார்த்தேன்.

தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதினார்கள், வரைந்தார்கள். அன்னப்பறவைகள் அல்லது வாத்துகளின் இறக்கைகளில் உருவான போனாவில் எழுதியிருக்கிறார்கள். செங்கோண முக்கோண வடிவ வரைக் கருவி (Set-square), அச்சு வார்ப்பு (Templates) மற்றும் வரைவி (Compasses) பயன்படுத்தியுள்ளார்கள். படங்கள் அதிமென்மையாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும் என்பதால் விலைமதிப்பு மிக்க கீரியின் முடியால் ஆன தூரிகையால் வண்ணம் தீட்டியுள்ளார்கள். வரிகளுக்கு இடையே அமைந்துள்ள ஓவியங்கள் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

முதலெழுத்து வடிவங்கள்

பலரின் உழைப்பில் ஒரு புத்தகம்

இப்புத்தகத்தை தனித்த எழுத்து வடிவில் (insular majuscule) நான்கு பேர் எழுதியுள்ளனர். நகலெடுத்தவரும், ஓவியம் வரைந்தவரும் ஒரே நபராக இருக்குமோ என்கிற எண்ணத்தையும் இப்புத்தகம் தருகிறது.

எழுத்தர் அ: புனித யோவான் நற்செய்தி நூலை நகலெடுத்தவர். பழமைவாதி மற்றும் மிதவாதியான இவர், எழுதியதுடன் சரி. பக்கங்களை மற்றவர்கள் அழகுபடுத்தட்டும் என விட்டுவிட்டார்.

எழுத்தர் ஆ: பல்வேறு நிறங்களைப் பயன்படுத்தியுள்ளார். இவரின் எழுத்துக்கள் சித்திரம் போல உள்ளன. சில பக்கங்களுக்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளார்.

எழுத்தர்கள் இ மற்றும் ஈ: இருவரும் சேர்ந்து, மத்தேயு, மாற்கு, லூக்கா நூல்களை நகலெடுத்துள்ளனர்.

எழுத்துப் பிழைகள் வந்தபோது, எழுத்தின் உள்ளே நிறைய புள்ளிகள் வைத்து மறைத்துள்ளார்கள். 281-ம் பக்கத்தை இரண்டுமுறை எழுதிவிட்டதால், ஒரு பக்கத்தில் ஆங்காங்கே சிலுவை அடையாளம் வரைந்து ‘அடித்திருக்கிறார்கள்’.

பக்கம் 281

ஒவ்வொரு அத்தியாயமும் தொடங்கும்பொது, முதல் எழுத்து பெரிதாக இருக்கும்தானே! அந்த எழுத்துக்களை மட்டும் தொகுத்து வைத்திருப்பதை அருங்காட்சியகத்தில் பார்த்தேன். என்னே அழகு! அவர்கள் பயன்படுத்திய மை மற்றும் நிறமிகள் குறித்த தகவல்களையும் வாசித்துவிட்டு, மேல் தளத்துக்கு படியேறினேன். ஒவ்வொரு படியிலும், Entry to the Long Room என எழுதியிருக்கிறது.

நீள அறையில் மெய்மறந்த பொழுது

நீள அறையில் கால் வைத்தபோது, முதல் தளமும், அதற்கு மேல் உள்ள இரண்டாம் தளமும் கண்களைக் கொள்ளை கொண்டன. நூலகத்தின் புத்தகங்கள், மரங்கள், பலகைகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே நிறத்தில் இருந்தன. முதல் தளம் எவ்வளவு உயரமோ, அதே உயரத்தில் இரண்டாம் தளமும் அமைந்திருக்கிறது, அதற்குமேலே வளைவான கூரை.

நீளமான அறையில் புத்தகங்கள்

அறையின் நடுவில் நடந்தேன். வலது புறமும் இடது புறமும் கதவுகளற்ற சிறு சிறு அறைகள். ஒவ்வோர் அறைக்கும் நடுவிலுள்ள சுவரின் இருபக்கமும் புத்தக அலமாரிகள். புத்தகங்களை எடுப்பதற்கு உயரமான ஏணி. அறைகளைப் பிரிக்கும் புத்தகச் சுவரின் முகப்பில் மில்டன், பிளேட்டோ, சாக்ரடீஸ், நியூட்டன் உள்ளிட்ட உலக அறிஞர்கள், அயர்லாந்து எழுத்தாளர்கள், மற்றும் நன்கொடையாளர்களின் மார்பளவு மார்பிள் சிலைகள் வசீகரிக்கின்றன.

மாணவர்களும், ஆய்வாளர்களும் இப்போதும் இந்நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள். புத்தகத்தில் A.f.34 என எழுதியிருந்தால், 34-வது புத்தகம், f அலமாரியில் A தட்டில் உள்ளது என்று பொருள். நடைபாதையின் நடுவில், கண்ணாடி குடுவையில் வரலாறாக மாறிய கெல்ஸ் புத்தகம் விரித்து வைக்கப்பட்டிருக்கிறது. கைகளால் எழுதி அழகுபடுத்தப்பட்ட ஜெப புத்தகமும் உள்ளது. கலை அதிசயம் கண்டு அதிசயித்தேன்!

காலம் கடந்த யாழிசை

அயர்லாந்தின் மிகப்பழமையான (The Brian Boru Harb) யாழ் இசைக்கருவியைப் பார்த்தேன். வில்லோ மற்றும் ஓக் மரங்களால் செய்யப்பட்ட இந்த யாழில் 29 பித்தளை நரம்புகள் இருக்கின்றன. வெள்ளியால் ஆன கழுத்தும் அதன் வடிவமைப்பும் இந்த யாழ் தலைமை இசைக்கலைஞர் பயன்படுத்தியதாக இருக்கலாம், காலிக் அயர்லாந்து (Gaelic Ireland) மற்றும் ஸ்காட்லாந்து உயர்குடியினருக்கு இசைத்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 1961-ல் பழுது நீக்கப்பட்டு, மறுபடியும் இழைகள் கோர்க்கப்பட்ட யாழ், வில்லியம் பர்ட்டோன் என்பவரால் (1733-96) டிரினிட்டி கல்லூரிக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டது.

மிகப் பழமையான யாழ்

அதிசயத்தைப் பார்த்துவிட்டு கீழே இறங்கினேன். நீள அறை பொறிக்கப்பட்ட தேநீர் குவளை வாங்க விரும்பினேன். பாதுகாப்பாகத் தருவதற்கு அட்டைப்பெட்டி இல்லை என்றார்கள். நான் தயங்கி நின்றதைப் பார்த்துவிட்டு, குமிழ்கள் நிறைந்த பையில் பொதிந்து கொடுத்தார்கள். மகிழ்வுடன் வெளியேறினேன்.

வீடற்ற இயேசு தூங்குகிறார்

கிறைஸ்ட் சர்ச் வழியாக நடந்தேன். கோவில் வளாகத்தில், நீளமான இருக்கையில் ஒருவர் படுத்துறங்கும் காட்சியைப் பார்த்தேன். கனமான போர்வையால் முகத்தையும் உடலையும் சேர்த்து மறைத்திருந்தார். அருகில் சென்றேன். அது வெண்கல சிலை என்பதை அறிந்து வியந்தேன்.

வீடற்ற இயேசு

‘வீடற்றவர்கள், பட்டினிகிடப்பவர்கள், நோயுற்றோர், சிறை கைதிகள், அகதிகள், புலம்பெயர்ந்தோர் மத்தியில் இயேசு’ என்பதை மையமாக வைத்து, கனடா நாட்டு சிற்பி திமொத்தேயு (Timothy Schmalz) நிறைய சிற்பங்களைச் செய்திருக்கிறார். 2011-ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் காலத்தில், டொரொன்டோ நகர வீதியில் குளிரில் படுத்துறங்கிய வீடற்ற ஒருவரைப் பார்த்த தாக்கத்தில், திமொத்தேயு செய்த இந்த சிற்பத்தின் பெயர், ‘வீடற்ற இயேசு’. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் இச்சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

படுத்துறங்கும் சிற்பத்தின் பாதத்தை மட்டும் பார்க்கலாம். அதில், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் தழும்புகள் தெரியும். ஒருவர் அமரும் அளவுக்கு அருகில் இடம் உண்டு. வீடற்றவருக்கு ஆறுதலாக இருக்க ஒவ்வொருவரையும் அழைக்கிறது அச்சிற்பம்.

மாலையில் விமான நிலையம் திரும்பினேன். மீண்டும் லண்டன் செல்வதற்காக, பயணச்சீட்டு பரிசோதிக்கும் இடத்துக்குச் சென்றேன். இணையம் வழியாக ஏற்கெனவே உறுதி செய்திருந்தாலும், கண்டிப்பாக தாள் வடிவத்தில் வேண்டும் என்றார்கள். “இதே விமானத்தில் லண்டனில் புறப்பட்டபோது தாள் வடிவத்தில் உங்கள் ஊழியர்கள் கேட்கவில்லையே” என்றேன். “அவர்கள் மறந்திருப்பார்கள்” என்றார்கள். வேறு வழியில்லை. கடையைத் தேடி பயணச்சீட்டை அச்செடுத்து வந்தேன். இனிய நினைவுகளுடன் லண்டன் புறப்பட்டேன்.

(பாதை விரியும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE