2 ஆயிரம் கடனுக்காக குழந்தையை கடத்திய சகத்தொழிலாளி: சந்தேகத்தால் சிக்கிய தம்பதி

By காமதேனு

2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக சகதொழிலாளியின் குழந்தையை கடத்திய தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் இரண்டு வயது ஆண் குழந்தையுடன் தம்பதி ஒன்று சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். இது குறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே காவல்துறையினர் குழந்தையுடன் இருந்த தம்பதியை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தங்கி தூய்மைப்பணியை மேற்கொள்ளும் டென்னி என்பவர் வேலு என்ற சக தொழிலாளியிடம் 2000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இதையடுத்து, பணத்தை கேட்டு வேலு தொந்தரவு செய்துள்ளார். ஆனால், டென்னியால் பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த வேலு, டென்னியின் 2 வயது ஆண் குழந்தையை கடத்த திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று தனது மனைவியுடன் குழந்தையை கடத்திக் கொண்டு திருப்பூர் சென்றது தெரியவந்தது. குழந்தையை காணாமல் டென்னி பரிதவித்து வந்துள்ளார். இதையடுத்து, குழந்தையை மீட்ட காவல்துறையினர் கடத்தல் தம்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2 ஆயிரம் பணத்துக்காக சகதொழிலாளியின் குழந்தையை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE