விடுப்பு எடுத்து காவடிகட்டு நிகழ்ச்சிக்குச் சென்ற மாணவன்: கொடூரமாக தாக்கிய பள்ளி தாளாளர் மீது அதிர்ச்சி புகார்

By காமதேனு

விடுப்பு எடுத்து காவடிகட்டு நிகழ்வுக்குச் சென்ற மாணவரை, பள்ளியின் தாளாளர் கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவரது மகன் அருண் ஜெயம்(16) இவர் அதேபகுதியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். அருண் ஜெயம் அவரது உடன் பிறந்த சகோதரர் காவடிகட்டி, திருச்செந்தூர் முருகனுக்கு அலகு குத்தி செல்லும் நிகழ்வில் கலந்துகொள்ள பள்ளிக்கு விடுப்பு எடுத்து இருந்தார்.

இந்நிலையில் விடுப்பு முடிந்து பள்ளிக்குச் சென்ற அருண் ஜெயத்தை பள்ளியின் தாளாளரும், கிறிஸ்தவ போதகருமான ராபின்சன் யாரைக் கேட்டு விடுப்பு எடுத்துவிட்டு கோயிலுக்குச் சென்றாய் என பிரம்பால் கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் அருண் ஜெயத்திற்கு உடலில் பல்வேறு இடங்களில் அடிபட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு சென்ற பின்பு காய்ச்சலும் வந்துவிட அருண் ஜெயந்தின் பெற்றோர் அவரை குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இதனிடையே மத காழ்ப்புணர்சியோடு, இந்து கோயில் விசேஷத்திற்கு விடுப்பு எடுத்ததால் தன் மகனை தாளாளர் அடித்ததாக மாணவனின் பெற்றோர், இரணியல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE