கார்கில் போர் 25-ம் ஆண்டு வெற்றி தினம்: பிரதமர் மோடி இன்று நினைவிடம் செல்கிறார்

By KU BUREAU

கார்கில் போர் 25-ம் ஆண்டு வெற்றி தினவிழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கார்கில் இன்று செல்கிறார். அத்துடன் அங்கு மறைந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியைக் கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர். இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி இந்தியா முழுவதும் எழுச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி பெற்ற நாளின் 25-ம் ஆண்டு ஆகும்

இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதேபோல் கார்கில் பகுதியில் உள்ள டிராஸ் பகுதியில் நேற்று முன்தினம் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கியது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கார்கில் இன்று செல்கிறார். அங்கு அவர், கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார். அதன் ஒரு பகுதியாக, ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டமானது 4.1 கிமீ நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதை திட்டம், மலைப்பகுதியில் சுமார் 15,800 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டால், இந்த சுரங்கப்பாதைதான் உலகின் மிக உயரத்தில் அமைக்கப்பட்டது என்ற பெருமையை பெறும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE