பேரூராட்சி உறுப்பினர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: நள்ளிரவில் பயங்கரம்

By KU BUREAU

ஆனேக்கல் பேரூராட்சி உறுப்பினர் ரவி மர்மநபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஊரகப் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்ற ஸ்கிராப் ரவி. இவர் ஆனேக்கல் பேரூராட்சி 22வது வார்டு உறுப்பினராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஆனேக்கல் நகரில் உள்ள ஓசூர் பிரதான சாலையில் அவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்மக்கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பியோட நினைத்த அவரை அக்கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே பேரூராட்சி உறுப்பினர் ரவி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த ஆனேக்கல் போலீஸார் விரைந்து வந்து ரவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக ரவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். ரவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை அருகே திரண்டுள்ளதால் அந்த இடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை அருகே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனேக்கல் பேரூராட்சி உறுப்பினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE